நயினார் நாகேந்திரன் பதவிக்கு வரும்முன்.. திமுகவுடன் என்ன பேசினார் தெரியுமா.. கே.என்.நேரு சீக்ரெட்!
நெல்லை: தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் வருவதற்கு முன்பாக தங்களுடன் என்ன பேசினார் என்பதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைச்சரவையா அல்லது தனி அமைச்சரவையா என்பதை முடிவு செய்துவிட்டு, திமுகவை விமர்சிக்கட்டும் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்த போது பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார் அப்போது முதல்வர் ஸ்டாலின், நான் சொல்வதை மாற்றுக் கட்சியில் இருந்தாலும் நயினார் நாகேந்திரனும் கூட ஏற்றுக் கொள்வார் என்று கூறி இருந்தார். இதனால் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணைகிறாரா என்ற விவாதம் நடந்தது.

பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன்
இதன்பின் ஏப்ரல் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது, நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக அறிவிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அன்றைய நாளிலேயே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. தற்போது அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வென்றால், கூட்டணி ஆட்சி என்று பாஜக தொடர்ச்சியாக கூறி வருகிறது.
நெல்லையில் கே.என்.நேரு
அதேபோல் நயினார் நாகேந்திரன் தொடர்ச்சியாக இனி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறி வருகிறார். இந்த நிலையில் நெல்லையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சீக்ரெட்டை உடைத்த கே.என்.நேரு
அப்போது கே.என்.நேரு, அப்படி சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு வந்திருக்கிறார். அப்படி சொல்லவில்லை என்றால், அந்த பதவியை அவருக்கு கொடுத்திருக்க மாட்டார்கள். அவர் மாநிலத் தலைவராவதற்கு முன்பாக எங்களுடன் என்னவெல்லாம் பேசினார் என்று நாங்கள் நன்றாக அறிவோம். அதனால் பொதுவெளியில் பேச முடியாது.
அதிமுக - பாஜக பிரச்சனை
அதனால் நயினார் நாகேந்திரன் பதவியை காப்பாற்றுவதற்காக பேசி வருகிறார். திமுகவை வீழ்த்துவது தான் அதிமுக - பாஜக கூட்டணியின் கொள்கை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் கூட்டணி அமைச்சரவையா அல்லது தனி அமைச்சரவையா என்று சொல்ல சொல்லுங்கள். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை முடித்துவிட்டு எங்கள் பக்கம் வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
தொடர்ந்து, ஜூலை 5ஆம் தேதி வரும் நெல்லையில் உள்ள மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. நெல்லையப்பர் திருக்கோவில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சாலைகள் செப்பனிடப்பட்டு தேரோட்டம் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications