தாலுகா ஆகிறது முத்துப்பேட்டை.. சட்டசபையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்!
சென்னை: சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை தனி தாலுக்காவாக செயல்படும் என வருவாய் துறை அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினா நேரத்தின் போது திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே கேள்வி நேரத்தின் வாயிலாக தனது தொகுதிக்கு புதிய தாலுக்காவை பெற்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. மாரிமுத்துவுக்கு சக உறுப்பினர்கள் சைகையிலேயே வாழ்த்துக் கூறினர்.

திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் உள்ள முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார் என்றும் ஆனால் இதுவரை அது நடைமுறைப் படுத்தப்படவில்லை எனவும் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தெரிவித்தார். இதனால் முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக மாற்றும் நடவடிக்கைக்கு இந்த அரசு ஆவணம் செய்யுமா என வினவினார்.

தனி தாலுக்கா
அதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் முத்துப்பேட்டை தாலுக்காவாக செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் புதிய தாலுக்கா ஒன்று உதயமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி அறிவித்த திட்டம் என்பதால் எவ்வித மறுப்பும் பேசாமல் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக செயல்படுத்துவோம் என பதிலளித்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

காந்திராஜன்
முன்னதாக கேள்வி நேரத்தின் போது பேசிய வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன், பொதுமக்களுக்கு பட்டா தொடர்பாக சிபாரிசு செய்து கடிதம் கொடுத்து அனுப்பினால் அதனை செய்து முடிக்காமல் தாசில்தார்கள் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக்கழிப்பதாகவும் பிரச்சனை இல்லாத விவகாரங்களிலும் பிரச்சனை இருப்பதாக கூறுகிறார்கள் எனவும் தனது புகாரை பதிவு செய்தார்.

அமைச்சர் பதில்
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் ஏதேனும் நிலப்பிரச்சனை இருந்தால் அது தொடர்பாக தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு தாம் கூறியிருப்பதாகவும் அதன்படி செய்தால் உரிய அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications