145 கிமீ வேகம்.. அச்சுறுத்தும் “மோக்கா” புயல்! மீனவர்கள் “அலர்டா” இருக்கனும் - அமைச்சர் வார்னிங்
சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவர்களின் அறிக்கை.
இந்திய வானிலை ஆய்வு மையம். இன்று 11-05-2023 காலை வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், தீவிர புயலாக மாறி வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் இதற்கு மோக்கா என
பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இது மேலும், அதி தீவிர புயலாக உருவெடுத்து மத்திய வங்கக்கடல் பகுதியினை கடந்து 13.05.2023 அன்று சற்று வலுவிழந்து 14.05.2023 அன்று 120 - 145 கி.மீ. / மணி வேகத்துடன் வங்க தேசம் மற்றும் மியான்மர் இவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மீனவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு எச்சரிக்கையின்படி குறித்து மீன்வனத் துறை ஆணையர் அவர்களுக்கும், கடலோர மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை பெருநகர ஆணையர் அவர்களுக்கும் விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.
மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர்கள், வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14.05.2023 வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது." என்றார்.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கடந்த 8 ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து 520 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று இரவு புயலாக மாறியது. இந்த புயலுக்கு 'மோக்கா' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது படிப்படியாக தீவிரமாகி இன்று காலை தீவிர புயலாக நள்ளிரவில் தீவிர புயலாகவும் வலுவடைய உள்ளதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இந்த தீவிர புயல் நிலவ வாய்ப்பு உள்ளது. இது வடக்கு - வட கிழக்கு திசையில் திரும்பி மே 13 ஆம் தேதி முதல் வலுகுறைந்து, மே 14 ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையைக் கடக்கக் கூடும்." என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications