விடிஞ்சதும் தண்ணி வடிஞ்சிருச்சேனு சங்கடப்பட்டுட்டாரு எடப்பாடி.. அமைச்சர் கேஎன் நேரு கிண்டல்!
சென்னை: தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிகனமழையிலும் பெரிய பாதிப்பு இல்லை, சென்னையில் இரவில் இருந்த மழை நீர் காலையில் வடிந்துவிட்டதால் மிகவும் சங்கடப்பட்டு வெள்ளை அறிக்கை வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ட்ரோன் மூலம் வழங்குவதற்கான சோதனை முன்னோட்டத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "நேற்று ஒரே நாளில் 17 - 20 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை மழை பதிவாகியுள்ளது. மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்ட காரணத்தால்தான் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
அதிமுக ஆட்சியில் சுமார் 400 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. தற்போது 782 கி.மீ தூர வடிகால்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் உடனடியாக மழைநீர் வடிந்துள்ளது. புளியந்தோப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். 398 அம்மா உணவகங்களில் இன்று காலை மட்டும் சுமார் 65,000 பேர் இலவசமாக உணவு அருந்தியுள்ளனர்.
அதிகாரிகளுக்கு என்னென்ன பணிகள் என்பதை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உத்தரவிட்டிருந்தனர். சென்னையில் கால் படாத இடங்களே இல்லை என்ற அளவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் வெள்ளச்சேரியாக இருந்த வேளச்சேரியில் இம்முறை எந்த பாதிப்பும் இல்லை. வேளச்சேரி மக்கள் இன்று காலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
நாங்கள் ஆய்வு செய்ததில் எங்குமே மழைநீர் தேங்கவில்லை. அதிமுக வேண்டுமென்றே குற்றம்சாட்டுகிறது. சென்னையில் இரவில் அவர்கள் தூங்கும்போது இருந்த வெள்ள நீர் காலையில் வடிந்ததால் மிகவும் சங்கடப்பட்டு வெள்ளை அறிக்கை வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications