பழைய நிர்வாகிகளே மீண்டும் பொறுப்புக்கு வரட்டும்னு தளபதி சொல்லிட்டாரு! கே.என்.நேரு வீசிய புது குண்டு!
சென்னை: திமுக உட்கட்சித் தேர்தலில் பழைய நிர்வாகிகளே மீண்டும் பொறுப்புக்கு வரட்டும் என ஸ்டாலினே கூறியதாக பேசியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
மீண்டும் பழைய நிர்வாகிகளே பொறுப்புக்கு வருவதற்கு எதற்கு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும் என ஆதங்கத்தை கொட்டுகிறார்கள் பதவி கிடைக்காதவர்கள்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு தர்ம சங்கடம் ஏற்படும் விதமாக அமைச்சர் நேரு பேசியது அமைந்துள்ளது.

அமைச்சர் சேகர்பாபு
திமுக தலைவராக 2வது முறை பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை வாழ்த்துவதற்காக அமைச்சர் சேகர்பாபு பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், அமைச்சர் நேரு ஆகியோர் பங்கேற்றனர். அதில் பேசிய அமைச்சர் நேரு, திமுக உட்கட்சித் தேர்தலை முதல்வர் ஸ்டாலின் மிகவும் லாவகமாக நடத்திக் காட்டியுள்ளதாக புகழாரம் சூட்டினார்.

ஆதங்கம்
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் இருந்தபோது கட்சிக்காக உழைத்த பழைய நிர்வாகிகளே மீண்டும் பொறுப்புக்கு வரட்டும் என ஸ்டாலின் கூறிவிட்டதாக நேரு பேசியிருக்கிறார். யதார்த்தமாக அமைச்சர் நேரு பேசியது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய கதையாக அமைந்துவிட்டது. திமுகவில் கட்சிப் பதவி எதிர்பார்த்து ஏமாற்றத்தில் உள்ள பலரும் பிறகு எதற்கு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும், விருப்பமனு கொடுக்கச் சொல்லவேண்டும் பேசாமல் பழைய நிர்வாகிகளையே மீண்டும் அறிவித்திருக்கலாமே என ஆதங்கத்தை கொட்டுகிறார்கள்.

ஜனநாயக முறைப்படி
ஜனநாயக முறைப்படி திமுக உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு தர்ம சங்கடம் ஏற்படும் விதமாக அமைச்சர் நேரு பேசியது அமைந்துள்ளது. ஏற்கனவே திமுக என்றால் அதில் புதியவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது, கட்சியில் உயர முடியாது என்ற பிம்பம் இருக்கும் சூழலில் அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் நேரு பேசியிருக்கிறார். மொத்தத்தில் இவரது பேச்சு கட்சித் தலைமைக்கு தான் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பொறுத்தவரை எதையுமே முதலில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் பிறகு அதில் தெளிவு கிடைத்த பிறகு தான் ஏற்றுக்கொள்வார்கள் என பாலகிருஷ்ணனை மேடையில் வைத்துக் கொண்டே நேரு பேசினார்.












Click it and Unblock the Notifications