"சேரி" வார்த்தை சர்ச்சை.. குஷ்புவுக்கு சப்போர்ட்டாக வந்த எல் முருகன்.. அவர் கொடுத்த அடடே விளக்கம்
சென்னை: பாஜக நிர்வாகி குஷ்பு "சேரி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் புது விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
கடந்த வாரம் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய பேச்சு தான் மிகப் பெரியளவில் சர்ச்சையானது. த்ரிஷாவுடன் நடிக்க முடியாமல் போனது குறித்துப் பேசும்போது அவர் கூறிய சில கருத்துகள் சர்ச்சையானது.

அவரது கருத்துகள் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் இருந்ததாகப் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். இணையத்தில் நெட்டிசன்கள் பலரும் இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானை சரமாரியாகச் சாடினர்.
மன்சூர் அலிகான் விவகாரம்: நடிகை த்ரிஷாவும் இந்த விவகாரத்தில் நேரடியாக மன்சூர் அலிகானை விமர்ச்சிருந்தார். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி என பலரும் இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் பேச்சைக் கண்டித்தனர். நடிகர் சங்கமும் கூட இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இந்த விவகாரத்தில் தான் குஷ்பு போட்ட ட்வீட் சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, "உங்களைப் போலச் சேரி மொழியில் என்னால் பேச முடியாது. மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைக் கண்களைத் திறந்து பாருங்கள்" என்று அவர் ட்வீட் செய்திருந்தார். சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்திய குஷ்பு மீது மிகக் கடுமையான நடவடிக்கை வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குஷ்பு விவகாரம்: குறிப்பாக அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையான நிலையில், அவர் விளக்கம் அளிப்பதாகச் சொன்னது இணையத்தில் பேசுபொருள் ஆனது. அதாவது, சேரி என்றால் பிரஞ்சு மொழியில் அன்பு என அர்த்தம் என்றும் தான் கிண்டலாகவே அந்த அர்த்தத்தில் வார்த்தை பயன்படுத்தியதாகக் கூறியிருந்தார்.
இருப்பினும், அவர் அளித்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை. பலரும் குஷ்பு மீது தொடர்ந்து விமர்சித்தே வருகிறார்கள். குஷ்பு தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முதல்முறையாகப் பதில் அளித்துள்ளார்.
அடடே விளக்கம்: இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "சேரி என்பதற்கு ஊர் என்று தமிழிலேயே அர்த்தம் இருக்கிறது. இது இங்குள்ள அனைவருக்குமே தெரியும். இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் விவாதிப்பது என்பது தேவையில்லாத ஒன்று என்றே நான் கருதுகிறேன். சேரி என்றாலே அது அனைத்து மக்களும் வசிக்கும் பகுதி என்று தான் அர்த்தம்.
குறிப்பிட்ட மக்கள் தான் அங்கே இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. அது மட்டுமின்றி இந்த விவகாரத்தில் ஏற்கனவே குஷ்பு பல முறை விளக்கம் அளித்துவிட்டார்கள். இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமென்றால் நேரடியாக நீங்கள் அவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். அவர் உங்களுக்கு விரிவான விளக்கத்தைக் கொடுப்பார்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications