"எம்ஜிஆர் தோற்றத்தில் விஜய் போஸ்டர்.. வரவேற்கலாமே.. தப்பில்லை" அமைச்சர் பேச்சால் பரபரப்பு
எம்ஜிஆர் வேடத்தில் விஜய்யின் போஸ்டர்கள் குறித்து மா.பா. பாண்டியராஜன் கருத்து கூறியுள்ளார்
சென்னை: "எம்ஜிஆர் தோற்றத்தில் விஜய் போஸ்டர்...வரவேற்கத்தக்க விஷயம்" என்று அமைச்சர் பாண்டியராஜன் ஏன் சொன்னார் என்பதுதான் தற்போதைய பரபரப்பான விஷயமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக எம்ஜிஆரின் போஸ்டர்களை போலவே விஜய் போஸ்டர்கள் உருவகப்படுத்தி தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது.. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையும், சர்ச்சையும் சேர்ந்தே எதிரொலிக்கிறது.

வழக்கமாக மதுரையில்தான் இந்த போஸ்டர்கள் ஒவ்வொரு வருடமும் பரபரப்பை ஏற்படுத்தும்... அதனால் பெரிய தாக்கத்தை இது இதுவரை ஏற்படுத்தியதில்லை... இந்த முறைதான் மதுரையைவிட்டு மற்ற மாவட்டங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதில், விஜய் ரசிகர்கள் எம்ஜிஆர் படங்களை, விஜய்யுடன் உருவகப்படுத்தி, ஒப்புமைப்படுத்தி, போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.. விஜய் மனைவி சங்கீதாவையும் ஜெயலலிதாவுடன் இணைத்து ஒட்டப்பட்டது இதில் ஹைலைட்டான விஷயம்.
விஜய் தான் அடுத்த முதல்வர் என்ற வாசகங்கள் அதில் இருப்பதை பார்த்ததுமே அதிமுகவினர் கொந்தளித்து விட்டனர்.. மேலும் எம்ஜிஆருடன் ஒப்புமைப்படுத்துவதை கண்டதும் எம்ஜிஆர் ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்... ஒரு சில இடங்களில் போஸ்டர்களை கிழித்தும் எறிந்தனர்.. சில இடங்களில் விஜய் ரசிகர்கள் மீது கேஸ் போடப்பட்டும் வருகிறது.
அமைச்சர் ஜெயக்குமார் "மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மன் ஆகிவிட முடியாது, செஞ்சிக்கோட்டை ஏறியவர்களெல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது" என்று சுடச்சுட ஒரு பதிலை இதற்கு தந்திருந்தார்.. ஆனால், அமைச்சர் பாண்டியராஜனோ, இதற்கு நேர் எதிரான கருத்தை சொல்லி உள்ளார்.. "எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு ஒட்டிய போஸ்டர் குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது ரசிகர்களின் விருப்பம். எம்ஜிஆர் ஜெயலலிதா போலவே அவர் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நினைப்பதில் எந்த தவறுமில்லை. அது வரவேற்கத்தக்க விஷயம் தான்.
ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு போகாத வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் எம்ஜிஆர் பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது" என்றும் தெரிவித்தார் என்றார்.
இதுதான் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.. ஏற்கனவே அதிமுகவுக்குள் இரட்டை தலைமை விவகாரம் ஓடி கொண்டிருக்கிறது.. மற்றொரு புறம் சசிகலா ஆதரவாளர்கள் என்று ஒரு குரூப் உள்ளே இருக்கிறார்கள்.. இதைதவிர, அதிருப்தி தலைவர்கள் நொந்து போய் உள்ளனர்.. சில அமைச்சர்கள் ரஜினி அரசியலை தூக்கி பிடித்து பேட்டி தருகிறார்கள்.
இப்படி எத்தனையோ விதமான முரண்கள் இருந்தாலும், எம்ஜிஆர் என்று வந்துவிட்டால் யாருமே அவரை அதிமுகவுக்காக விட்டுத்தர மாட்டார்கள்.. ஆனால், அமைச்சர் பாண்டியராஜன் மட்டும் ஏன் எதிர்க்கவில்லை? விஜய்-க்கு சப்போர்ட் செய்து பேசுகிறாரே? எம்ஜிஆர் படத்துடன், நாளைய முதல்வர் விஜய் என்றுதான் அந்த போஸ்டரில் தெளிவாக இருக்கும்போது, இது ஒருவகையில் வாக்குகளை பெறும் விஷயம் போலத்தானே.. அதை ஏன் கண்டிக்கவில்லை? என்ன காரணம் என்பதுதான் ரத்தத்தின் ரத்தங்களுக்கு வந்துள்ள சந்தேகம்.












Click it and Unblock the Notifications