ட்ரிப்ஸ் ஏற்றப்பட்ட குழந்தையின் கை அழுகியதா? மருத்துவமனையில் என்ன நடந்தது? மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தையின் கை கறுப்பாகி, செயலிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர் வழிந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமத்தினர். அங்கு குழந்தைக்கு வலது கையில் ட்ரிப்ஸ் போட்டுள்ளனர். ட்ரிப்ஸ் போடப்பட்ட இடத்தில் கை கறுப்பாக மாறியுள்ளது. பின்னர் வலது கை முட்டி பகுதி வரை செயலிழந்துள்ளது.

பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் வலது கையை அகற்ற வேண்டும் எனக் கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் குழந்தையின் கை அழுகியதாக புகார் எழுந்துள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "செவிலியர்களின் அலட்சியத்தால், ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக புகார் எழுதுள்ளது. குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரித்தேன். ஏற்கனவே குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளன.
கையில் ஊசி செலுத்தியது குறித்து இன்று விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். மருத்துவர்களாக இருக்கட்டும் அல்லது செவிலியர்களாக இருக்கட்டும். அவர்கள் யாரும் பாதிப்பு ஏற்படுத்த மருத்துவமனைக்கு வருவதில்லை. பாதுகாக்கத்தான் வருகிறார்கள். நிச்சயம் உண்மைத்தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். சிகிச்சையின்போது கவனக்குறைவு இருந்துள்ளதா எனக் கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications