உங்களை நாய் கடிச்சாலும் இங்க வாங்க.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபர பதில்!
சென்னை: திமுக அரசு, தமிழ்நாடு மருத்துவத் துறையை தொடர்ந்து சீரழித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ் - ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய்த் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறிநாய்க் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்ததகவும் பின்னர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, குழந்தையின் உடலில் அசைவு இருந்ததால் கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வெறிநாய் கடிக்கான எந்த ஒரு தடயமும் இல்லை எனவும், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குரிய சிகிச்சைகள் அளித்ததால் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி, தற்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் தாய் தெரிவித்ததாக சுட்டிக்காட்டி, தமிழக சுகாதாரத்துறையை விமர்சித்து அளிக்கை வெளியிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தின் தலையெழுத்து, முதலமைச்சரின் மகன் விளையாட்டுத் துறை மந்திரி, சுகாதாரத் துறை மந்திரி மா.சுப்பிரமணியன் விளையாட்டுப் பயிற்சியாளராக வலம் வருவதால், துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையை பார்க்கும்போது, இவர் எப்படி முதலமைச்சராக இருந்தார் என தோன்றுகிறது. கேரளாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வந்து செல்கின்றனர்.
முதலமைச்சராக நான்கு ஆண்டுகள் இருந்தும் ஒரு சின்ன விஷயத்தை சரியாக பார்க்கும் தன்மை எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. விளையாட்டுத்துறை பயிற்சியாளர் என என்னை விமர்சித்ததற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி. எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவர்களோடு இருப்பவர்கள் எல்லாம் 6 மணி வரை நிச்சயம் குறட்டை விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். நான் 4 மணிக்கு எழுந்து நடப்பது அவருக்கு வயிற்றெரிச்சலை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் மருத்துவத்துறை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் செய்ததை நான் இரண்டரை ஆண்டுகளில் செய்திருக்கிறேன். நான் இந்த இரண்டரை ஆண்டுகளில் செய்துள்ள பணிகளை பட்டியல் போட்டுத் தருகிறேன். 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் செய்ததை பட்டியல் போட்டுத் தரட்டும். என்னை விட அதிகமாக மருத்துவமனைகளில் ஆய்வு செய்து பணியாற்றி இருந்தால் அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறேன்.
பாம்புக்கடி, நாய்க்கடி மருந்துகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இருந்தன. இப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருக்கிறது. நாய் கடிக்கு மருந்தில்லை என்று ஈபிஎஸ் சொல்லி உள்ளார். உங்களுக்கு எங்கேயாவது நாய் கடித்தால் நீங்கள் ஆரம்ப சுகாதார மையங்களிலேயே ஊசி போட்டுக் கொள்ளலாம். இந்த வசதி கடந்த இரண்டரை ஆண்டு காலமாகத்தான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications