குழந்தை தொப்புள் கொடியை வெட்டிய இர்பான்.. மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாது- அமைச்சர் மா.சு.
சென்னை: குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை யூடியூபில் வெளியிட்ட யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்க முடியாதது என மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களின் சந்திப்பின் போது கூறியதாவது: யூடியூபர் இர்ஃபான், தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட அவரது செயல் மன்னிக்கவே முடியாது. எனவே அவர் மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க முடியாது. அவரது செயல் கண்டிக்கத்தக்கது.

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
இர்ஃபான் விவகாரத்தில் மருத்துவர் நிவேதிதா மீதும் செம்மஞ்சேரி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை காப்பாற்ற திமுக அரசு எப்போதும் நினைக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்த பிரபல யூடியூபர் இர்ஃபான். இவரது Irfan's View என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் உணவகங்களுக்கு போய் அங்கிருக்கும் உணவுகளை ரிவ்யூ செய்து சேனலில் வெளியிடுவார். உணவு குறித்து அவர் வர்ணிக்கும் வார்த்தைகளையும் முக பாவனைகளையும் பார்க்கும் பாலோயர்கள் அவர்களாகவே சாப்பிட்டது போல் நினைத்துக் கொள்வார்கள்.
அப்படி மிகவும் பிரபலமாகி லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளார் இர்ஃபான். அவருக்கு ஆசிபா என்பவருடன் திருமணமானது. அவருடைய மனைவி கடந்த ஆண்டு கருத்தரித்தார். அந்த குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிவது இந்தியாவில் சட்டவிரோதம். இதனால் அவர் தனது மனைவியை துபாய்க்கு அழைத்துச் சென்று அங்கு பாலின சோதனை நடத்தியுள்ளார்.
பிறகு அதன் முடிவுகளை பார்வையிட்ட நிலையில் அதை வீடியோவாக வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டில் அறிந்து கொள்வது சரி, ஆனால் அதன் முடிவுகளை ஒரு விழா வைத்து அறிவித்து அதை வீடியோவாக சமூகவலைதளங்களில் வெளியிட்டதை பலர் கண்டித்தனர். அப்போதே அவரிடம் மருத்துவத் துறை சார்பில் விளக்கம் கேட்டு அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அவருக்கு ஜூலை 24 ஆம் தேதி சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த சர்ச்சைகள் ஓய்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரன்னராகினார். இந்த நிலையில் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அதிலேயே வீடியோ நாளை வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்.
அடுத்த நாள் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் குழந்தையை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் வெட்டும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வீட்டில் இருந்து ஜூஸ் குடித்துவிட்டு மருத்துவமனைக்கு வருவது, மருத்துவமனையில் பிரசவத்திற்கு முந்தைய கவனிப்பு, பிரசவத்தின் போது நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தார்.
இர்ஃபானின் இந்த செயலுக்கு மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பிரசவ அறையில் ஷூட்டிங் போல் எல்லாரையும் வைத்துக் கொண்டு வீடியோ எடுத்ததே தவறு. முழுக்கை சட்டை அணியவில்லை, கையில் கிளவுஸ் இல்லை. இந்த போட்டோஷூட்டிற்கு மருத்துவர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி மற்ற மருத்துவர்களிடம் எழுந்தது.
இந்த நிலையில் இர்ஃபான் மனைவிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் நிவேதிதா மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்களுக்கு மருத்துவரின் லைசன்ஸையே ரத்து செய்யப்படும் அளவுக்கு தண்டனை கொடுக்கப்படும் என்கிறார்கள். என்ன நடக்கும் என்பது குறித்து விசாரணையில்தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications