வெளிநாடு சென்று நீண்ட நாட்களாக திரும்பிவராத அரசு மருத்துவர்கள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் வார்னிங்!
சென்னை: வெளிநாடுகளுக்குச் சென்று நீண்ட நாட்களாக திரும்பாத அரசு மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்லக்கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சில வாரங்களாக பல்வேறு அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அண்மையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தார். இந்நிலையில் சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான உணர், செயல்திறன் பூங்காவை திறந்து வைத்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று உணர் திறன் பூங்கா 30 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல நவீன வசதிகள் இந்த பூங்காவில் உள்ளது. ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
நீரழிவு நோயாளிகள் காலையில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த பின் முடிவு வரும் வரை காத்திருக்க ஐந்து லட்சம் மதிப்பீட்டில் அமர்வு கூடம் திறக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு 12 ஆயிரம் பேர் வருகிறார்கள். கூடுதல் வசதிகள் மேற்கொள்ள 112 கோடி மதிப்பீட்டில் கிரிட்டிக்கல் கேர் கட்டிடம் கட்டப்படவுள்ளது. தரை தளம் மற்றும் ஆறு தளம் கொண்டதாகவும் 300 படுக்கை வசதி கொண்டதாக அமைய உள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கொரோனா காலத்தில் மருத்துவத்துறையில் பணியாற்றியவர்களை பணியமர்த்திய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். கிட்டத்தட்ட 4 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 3000 காலி பணியிடங்கள் ஒரு மாதத்துக்குள் நிரப்பப்படும். முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்குவார்.
அரசு அனுமதி இல்லாமல் ஒரு அரசு மருத்துவர்கள் கூட வெளிநாடு செல்ல முடியாது. அப்படி அனுமதி பெற்று வெளிநாடு சென்று அனுமதிக்கப்பட்ட காலத்தை தாண்டி நீண்ட நாட்களாக திரும்பாத மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லாமல் அரசு மருத்துவர்கள் வெளிநாடு செல்லக்கூடாது. அரசு மருத்துவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களின் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
அண்மையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சுகாதார பணிகள் துணை இயக்குநருக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications