கோலம் போட்டதால் கைதில்லை.. கோலம் சொன்ன கருத்து அலங்கோலமாக இருந்ததால் கைது.. மாஃபா விளக்கம்
சென்னை: கோலம் போட்டதால் யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் போட்ட கோலம் சொன்ன கருத்து அலங்கோலமாக இருந்ததால்தான் கைது செய்யப்பட்டனர் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருரகிறது. இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கோலமிட்டு தங்கள் எதிர்ப்பை 6 பெண்கள் வெளிப்படுத்தினர்.
அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதை திமுக தலைவர் முக ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

அமைச்சர்
இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜத்தில் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் தேசிய கிராமிய கலை விழாவின் நிறைவு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

தொலைகாட்சி உள்ளவர்கள்
அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் அழிந்து வரும் 100 கலைகளை அடையாளப்படுத்தி காப்பாற்றி வருகிறோம். ஜனவரி 16-ஆம் தேதி எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவை குறித்து மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார். இதை வீட்டில் தொலைக்காட்சி உள்ளவர்கள் கேட்கலாம்.

புத்தகத்தை வாசித்து
அவ்வாறு கேட்க இயலாத மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அரசே தெளிவுப்படுத்திவிட்டது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் அந்த புத்தகத்தை அவரே வாசித்து மாணவர்களுக்கு கருத்துகளை கூறலாம்.

தேச விரோத கருத்துகள்
கோலம் போட்டதிற்காக யாரும் கைது செய்யப்படவில்லை. தேச விரோத கருத்துகளை கோல வடிவில் சொன்னாலும் அது தவறுதான். எனவே கோலத்தில் பிரச்சினை இல்லை. கோலம் சொன்ன கருத்துகள் அலங்கோலமாக இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications