சாத்தானே வேதம் ஓதுகிறது! அதிமுகவுக்கு வக்காலத்து வாங்கியவர்தான் பன்வாரிலால்! டென்ஷனான மனோ தங்கராஜ்
சென்னை: தமிழகத்தில் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக பன்வாரிலால் புரோகித் குற்றஞ்சாட்டிய நிலையில், இது தொடர்பாக திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வரை ஆளுநராக இருந்தவர் பன்வாரிலால் புரோகித். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆளுநராகப் பொறுப்பேற்ற இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பதவியில் இருந்தார்.
இந்த காலகட்டத்தில் இவர் மீது அப்போதைய எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. குறிப்பாக ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்படுவதாக விமர்சித்து இருந்தனர்.

பரபர புகார்
இப்போது தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டு உள்ளார். பன்வாரிலால் புரோகித் இப்போது பஞ்சாப் ஆளுநராக உள்ளார். இதனிடையே சில சமீபத்தில் அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய பன்வாரிலால் புரோகித், "தமிழ்நாட்டில் நான் ஆளுநராக பணியாற்றிய 4 ஆண்டுகள் மிகவும் மோசமானதாக இருந்தது. நான் சென்ற போது அங்கு ஆளுநர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழலே இருந்தது" என்று கூறி இருந்தார்.

மறுப்பு
மேலும், தான் ஆளுநராக இருந்த போது 27 துணைவேந்தர்களை நியாயமாக நியமித்து இருந்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இருப்பினும், முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கேபி அன்பழகன் விளக்கமளித்து உள்ளார்

மனோ தங்கராஜ்
இதனிடையே தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். மாநில அரசு சார்பில் நடத்தப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர், "மாநிலத்தின் அதிகாரங்களைப் பிடுங்கும் முயற்சி தான் இது. மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்தியில் அதிகாரத்தைக் குவித்து வருகின்றனர். இதை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

ஆளுநர் பேச்சு
மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும். இது தான் அனைத்து மாநிலங்களின் கோரிக்கையாக உள்ளது. இதனை மீறுவது கண்டனத்திற்குரியது. தமிழக முதல்வரிடம் கலந்தாலோசித்து இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.. தமிழ்நாட்டில் வால், மூக்கு, தலையை நுழைப்பேன் என்று ஆளுநர் தமிழிசை கூறுகிறார். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. ஆனால் இதெல்லாம் எதுவும் எடுபடாது.

பாஜக மீது தாக்கு
அன்பு, அறன் என்பதற்கு நேர் எதிர்ச் சொல்லான வெறுப்பு என்பதைத் தான் பாஜக பேசுகிறார்கள். ஆன்மீகத்திற்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. மாற்று மதங்களைக் கொச்சைப்படுத்தி இழிவு படுத்தும் செயலை யாரும் ஆன்மீகம் என்று சொல்ல மாட்டார்கள். பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் தான் பாஜகவினர். எந்த பொய் மூட்டையைக் கொண்டும் திமுகவைத் தகர்க்க முடியாது.

வக்காலத்து
ஆளுநர் பதவி வேண்டுமா வேண்டாமா என்னும் சர்ச்சை நடந்து வருகிறது. எப்போதுமே ஆளுநர் பதவி தலைவலியாக இருந்து வருகிறது. தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் இருந்த போது தான் அதிமுகவில் துணைவேந்தர்கள் பதவி வழங்கப்பட்டது. சாத்தான் வேதம் ஓதுவது போன்று அவர் தற்போது பேசுகிறார். அவர் பதவியில் இருந்த காலத்தில் அதிமுக அரசுக்கு வக்காலத்து வாங்கும் பணியைத் தானே செய்தார்" என்றார்












Click it and Unblock the Notifications