திமுக ஆட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி! வரிந்து கட்டும் அமைச்சர் எம்.ஆர்.கே.!
சென்னை: திமுக ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வரிந்துகட்டியுள்ளார்.
குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் எடப்பாடி பழனிசாமி தவறான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக கடுகடுத்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

எதிர்க்கட்சி தலைவர்
03.10.2022 அன்று தமிழக எதிர்க்கட்சி தலைவர், டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவித்துப் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

போலி விவசாயி
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு வெற்று அறிக்கையினை வெளியிட்டு குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் வெற்று விளம்பரத்தை அரங்கேற்றியுள்ளார். முதற்கட்டமாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 1 இலட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே தவறானது. இத்துறையின் முதற்கட்ட கணக்கெடுப்பில் 17,775 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆதாரமின்றி அறிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எப்பொழுதுமே ஆதாரமின்றி பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் வைப்பதிலேயே வாடிக்கையாக கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றிய அடிப்படை புரிதல் ஏதும் இல்லாமல் அறிக்கை விடுகிறார். நிரந்தரக் கட்டடம் கொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தான் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் என்று கூறுவர். ஆனாலும் அவையும் தற்காலிகமாகக் கொள்முதல் செய்பவை தான். நெல் கொள்முதலைக் குறைத்திட வேண்டும் என்று அரசு கூறுவதாக வடிக்கட்டிய பொய்யைக் கூறியுள்ளார்.

புள்ளி விவரம்
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 753 கொள்முதல் நிலையங்கள் மூலம் தமிழகம் முழுவதும் 3.22 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 531 கொள்முதல் நிலையங்கள் மூலம் 2.07 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களைப் பார்த்தாலே நெல் கொள்முதல் தொடர்பாக எந்த விவரத்தையும் புரிந்து கொள்ளாமலும், அறிந்து கொள்ளாமலும் வேண்டுமென்றே இவ்வரசின் மீது களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சித் தலைவர் தவறான அறிக்கையை விடுகிறார் என்பது தெளிவாகும்.

எழுத்துப் பிழை
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பட்டியல் பெறப்பட்டவுடன் அதற்கான தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை இந்த பருவத்திற்கு ரூ. 420.05 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர என்பதை 'நிரந்த' என்றும் கொள்முதலைக் 'கொல்முதல்' என்றும் அலைக்கழிப்பு என்பதை 'அழைகளிப்பு' என்றும் குறிப்பிடுவதிலிருந்தே எவ்வளவு 'ஆழ்ந்து' அறிக்கை விடுகிறார் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்.

காழ்ப்புணர்ச்சி
போலி விவசாயியாக நாடகமாடியவருக்கு இந்த உண்மை நிலவரம் கூட தெரியாமல் யாரோ எழுதிகொடுத்ததை படித்துப்பார்க்காமல் அவசர கதியில் அறிக்கையாக வெளியிடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் போலி விவசாயி எடப்பாடி. திமுக ஆட்சியின் சாதனைகளை தன்னுடைய ஆட்சிக்காலத்தில் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை உண்மைக்கு புறம்பான அறிக்கையாகும்.












Click it and Unblock the Notifications