வயிற்றில் புளியைக் கரைக்கும் தக்காளி விலை.. அமைச்சர் இன்று அவசர ஆலோசனை.. முக்கிய முடிவு? ஓஹோ!
சென்னை: வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தக்காளி விலை உயர்வு நீடித்து இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200ஐ எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தக்காளி சாகுபடியில் முன்னிலையில் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரே நேரத்தில் பெய்த மழையால் தக்காளிகள், செடிகளிலேயே அழுகின. தக்காளிச் செடிகளும் பாதிக்கப்பட்டன. இதனால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. தக்காளி அதிகம் விளையும் மூன்று மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் விளைச்சல் குறைவால் தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டியது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையவில்லை. கடந்த வாரத்தில் ரூ. 100ஐ விட சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் உச்சத்தை எட்டி தற்போது கிலோ ரூ.200ஐ எட்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை கோயம்பேடு சந்தையில் 140க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை மீண்டும் மளமளவென உயர்ந்து வருகிறது.
200-ஐ தொட்ட தக்காளி: சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று ஒரே நாளில் ரூ.20 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.20 உயர்ந்து ஒரு கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ரூ.200 வரை விற்கப்படுகிறது.
தக்காளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் அவதியடைந்துள்ளனர். தக்காளி விலை கடுமையான உயர்வால், உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் நிலவி வருகிறது.
ரேஷன் கடைகளில்: அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பண்ணைப் பசுமை கடைகள் மற்றும் சுமார் 300 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால், அங்கு கூட்டம் அலை மோதுகிறது. ஒருவருக்கு 1 கிலோ மட்டுமே என்ற வரம்புடன் விற்கப்பட்டாலும், விரைவிலேயே தக்காளி விற்றுத் தீர்ந்து விடுகிறது. எனவே, கூடுதலாக விற்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையாகும் நிலையில், தக்காளி விலையை கட்டுப்படுத்துவது, தக்காளிக்கு விலை நிர்ணயிப்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

இன்று முக்கிய ஆலோசனை: தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது பண்ணைப் பசுமைக் கடைகள் மற்றும் 300 ரேஷன் கடைகளில் மட்டுமே ரூபாய் 60 என்ற விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்னும் அதிகமான ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வெளிச் சந்தையில் 150க்கு மேல் விற்கப்பட்டாலும், ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன. குறைந்த அளவில் தான் ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு விற்பனைக்கு வரும் தக்காளி ஒரு மணி நேரத்திற்குள் விற்று விடுகின்றன. அதிகமாக தக்காளியை இறக்குமதி செய்வது தொடர்பாக இன்று முக்கிய முடிவு எடுக்கப்படலாம். தமிழ்நாடு அரசின் முடிவு பொதுமக்களுக்கு பலன் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications