ஒரு தொகுதிக்கு ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி! எங்கெங்கு முன்னுரிமை? அமைச்சர் பொன்முடி பதில்!
சென்னை: ஒரு தொகுதிக்கு ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முதலில் கல்லூரிகளே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பிறகு அடுத்தடுத்த இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் நிறுவப்படும் எனக் கூறியுள்ளார்.
பூந்தமல்லி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

அரசு கல்லூரி
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான கிருஷ்ணசாமி முன் வைத்தார். மேலும், தற்போது 3 கல்லூரிகள் இருந்தாலும் பல கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் போக்குவரத்து நெரிசலால் 4 மணி நேரம் பயண நேரம் ஆவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி
இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உங்க தொகுதியில் 3 கல்லூரிகளை வைத்துக்கொண்டு மேலும் புதிதாக ஒரு கல்லூரியை கேட்பது நியாயமா, ஒரு கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் தமிழகத்தில் பல உள்ளன. அதனால் முதலில் கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அங்கு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் எனக் கூறினார்.

உயர்கல்வித்துறை
மேலும், தமிழக முதலமைச்சரை பொறுத்தவரை உயர்கல்வித்துறையை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்புபவர் என்றும் ஒரு தொகுதிக்கு ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு தொகுதிக்கு ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி என்ற அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

எல்லோருக்கு உரிமை
எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் கல்லூரி அமைய வேண்டும் என ஆசைப்படுவது இயல்பான ஒன்று எனவும் அதில் தவறேதும் இல்லை எனவும் கூறினார். சபாநாயகரே அவரது தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி வேண்டும் என கேட்டிருப்பதாகவும் ஆகையால் முன்னுரிமை அடிப்படையில் தொகுதிகளுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கொடுக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications