கொஞ்சம் பேசுங்க அண்ணாமலை! பாஜகவை கூட்டணிக்கு அழைக்கும் அமைச்சர் பொன்முடி! ஓ இதுதான் காரணமா?
சென்னை : இந்தி மொழியில் நீட்தேர்வு எழுதுபவர்களுக்கு தான் அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய பாஜக தலைவர் அண்ணாமலையும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 51.20% மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10% குறைவு ஆகும். 2020-ஆம் ஆண்டில் 57.40% ஆகவும், 2021-ஆம் ஆண்டில் 54.40% ஆகவும் இருந்த நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடப்பாண்டிலும் குறைந்து இருக்கிறது.

நீட் தேர்வு தோல்வி
தமிழ்நாட்டிலிருந்து நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதிய 1,32,167 பேரில், 12.86% மாணவர்கள் தான் அரசு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இதுவே மிகக்குறைந்த விகிதம் ஆகும். அவர்களிலும் கூட சுமார் 20%, அதாவது 3400 மாணவர்கள் மட்டும் தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 720-க்கு 450 முதல் 471 மதிப்பெண் பெற்றவர்கள் வெறும் மூவர் மட்டும் தான் என்ற தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், தோல்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டுமென பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமைச்சர் க.பொன்முடி
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய பாஜக தலைவர் அண்ணாமலையும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அண்ணாமலை தமிழக அரசோடு சேர்ந்து நீட் தேர்வு ரத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்

பாஜக அண்ணாமலை
நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தவிர்க்கபட வேண்டும் எந்தத் துறையில் படித்தாலும் நான் முதல்வன் என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும். ஹிந்தியில் நீட் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமே தேர்வாகி வருகின்றனர். தமிழில் நீட் தேர்வு எழுதுபவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம் என்பதால் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்.

நீட் தேர்வுக்கு ஆதரவு
இடப்பற்றாக்குறையால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அரசு கல்லூரிகளில் 20% இடங்களை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், ஏழை மாணவர்கள் தங்கி படிக்க வசதியாக படிப்படியாக அரசு கல்லூரிகளில் விடுதிகள் அதிகரிக்கப்படும்" என உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். இந்நிலையில் தமிழக பாஜக நீட் தேர்வுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications