அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி ஊதியம்: அமைச்சர் பொன்முடி நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, இங்கு, தேசியக் கல்விக்கொள்கையை முன்வைத்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

பொன்முடி vs ஆளுநர்: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆர்.என்.ரவி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளை குறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கிடையே கடந்த ஜூலை 18ஆம் தேதி அமைச்சர் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன் காரணமாக அன்று நடைபெற்ற திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்கவில்லை. ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கினார்.
அமைச்சர் பொன்முடி ஆலோசனை: இந்நிலையில், இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பொதுவான பாடத்திட்டம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை மேற்கொண்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. நேற்று ஆளுநர் ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய முடிவுகள்: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனான அமைச்சர் பொன்முடியின் ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதலாக ஊதியம் வழங்கப்படும். உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள, பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும்.
மேலும், பல்கலைக்கழகங்களில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்டோரை, தேர்வு செய்ய குழு அமைத்து வெளிப்படையாக தேர்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழக விதிகளில் மாற்றம் ஏற்படுத்தி, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தகுதி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications