பதறிய பிடிஆர்.. செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலியா? வெளிநாட்டு விமான பயணத்தால் லேட்டாதான் தெரியுமாம்
சென்னை: தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது நள்ளிரவு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த விசயமே தனக்கு தற்போதுதான் தெரியும் தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "ஒரு நீண்ட விமானப் பயணத்தில், தற்போது தான் அயல்நாட்டுக்கு வந்திறங்கினேன். எங்களுடைய அமைச்சரவை சகா வி.செந்தில் பாலாஜி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருப்பதையும் தற்போது தான் அறிந்தேன்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்டப் பிரச்சினை ஒன்றை இந்தத் தருணத்தில் முதன்மைப்படுத்தி அடக்குமுறையான சூழலை உருவாக்கியிருப்பது வருத்தமளிக்கிறது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையிலும், 17 மணிநேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து அவர் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. எனது முதன்மையான கவலை அவரது உடல் நலன் பற்றியதுதான். அவரை நேரில் சந்தித்துப் பேச முடியாத நிலையில், அவர் விரைவில் முழுமையான உடல்நலம் பெற்றிடப் பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டு உள்ளார். செந்தில் பாலாஜி நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே ஓமந்தூரார் மருத்துவமனைக்கு ஏராளமான அமைச்சர்கள் வருகை தந்தனர்.

நள்ளிரவே தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எவ வேலு, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதேபோல் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கேஎன் நேரு, தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வந்தனர். அதேபோல் ஏராளமான திமுக எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தனர்.
செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது உறுதியானதாக ஓமந்தூரார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், ""மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி, வயது 47, அவர்களுக்கு இருதய இரத்த நாள பரிசோதனை 14.06.2023 அன்று காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது.
அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கிடையே செந்தில் பாலாஜியை ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டார். அவர் தரப்பின் இடைக்கால ஜாமின் மனுவின் தீர்ப்பு காலை அளிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications