நாக்கை அறுப்பேன் என சொல்வதா... ராஜேந்திர பாலாஜியை கைது செய்க.. திருமாவளவன் ஆவேசம்
சென்னை: கமல்ஹாசன் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்து, பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் மநீம கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி கேள்வி
கமல்ஹாசனின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐஎஸ் அமைப்பிடம் இருந்து பணம் வாங்கிவிட்டாரா கமல்ஹாசன்? என்று கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

அமைச்சர் விளக்கம்
சுதந்திர இந்தியாவின் தீவிரவாதி இந்து என கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், மன்னிப்பு கேட்டால் கமல் நாக்கை அறுக்கவேண்டும் என பேசிய கருத்தை திரும்ப பெறுகிறேன் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

திருமாவளவன் வலியுறுத்தல்
இந்தநிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் உண்மையை பேசியதற்காக பாராட்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தேர்தல் பரப்புரையின் போது, மதத்தை குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிக்கு முரணாக அவர் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் கருத்து
கமல்ஹாசன் இந்து எனக் குறிப்பிட்டு இருக்க வேண்டாம் என்பதே தமது நிலைப்பாடு எனவும் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார். கமல்ஹாசனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால், அதனை அமைச்சர் கண்டிக்கலாம். ஆனால் அதனை விடுத்து அவரின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது, மட்டுமல்ல தண்டனைக்குறியதும் தான் எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

முதல்வருக்கு வேண்டுகோள்
எனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து கைது கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இப்படி வன்முறையை தூண்டும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியில் தொடர செய்வது நியாயம் அல்ல என தெரிவித்துள்ள தொல். திருமாவளவன் அவரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications