கோயம்பேடு இன்றே கடைசி.. இனி கிளாம்பாக்கம்தான்.. ஆம்னி பேருந்துகளுக்கு கடிவாளம் போட்ட சேகர்பாபு
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கும் நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் அங்கிருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
வளர்ந்து வரும் நகரமயமாக்கல் சென்னையை நோக்கி ஏராளமான மக்களை நகர்த்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

ஆனால் இவர்களுக்கான முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தாம்பரம், திருவான்மியூர் போன்ற புறநகர் பகுதிகளில் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை குறைந்த எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கோயம்பேடு வந்தால்தான் பஸ் கிடைக்கும் என்கிற சூழல் இருக்கிறது. அப்படியே கோயம்பேடு வந்து பஸ் புடிச்சாலும் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
இந்த பிரச்னையை சமாளிக்கதான் வண்டலூரையடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை கட்டுவது என்று கடந்த அதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இவை முடியும்போது திட்டமிட்டதைவிட கூடுதலாக 25 சதிவிகிதம் செலவை இழுத்தன. இருப்பினும் ஒரு வழியாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அது பயன்பாட்டுக்கு வந்தது.
இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு அதிக அளவிலும், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு குறைவான அளவில் பேருந்துகளும் இயக்கப்படும். அதன் பின்னர் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல ஆம்னி பேருந்துகள் இங்கிருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்லும் பயணிகள், கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்துதான் டிக்கெட்களை புக்செய்திருக்கிறார்கள் என்றும், எனவே பொங்கல் முடியும் வரை கோயம்பேடுலிருந்து பேருந்துகளை இயக்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரியிருந்தனர். இதனையடுத்து ஜனவரி 24ம் தேதி வரை கோயம்பேடுலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதித்தது.
இந்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நாளை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது, "ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள். கோயம்பேட்டில் இன்றுடன் ஆம்னி பேருந்துகள் முழுமையாக தடை செய்யப்படும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக அரசு செயல்பட முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications