அறநிலையத் துறையை கலைத்துவிட்டால் கோயில்களை பராமரிப்பது யார்.. அண்ணாமலைக்கு அமைச்சர் கேள்வி
சென்னை: அறநிலையத் துறையை கலைத்து விட்டால் கோயில்களை பராமரிப்பது யார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சுவாமி திருவீதி உலா வருவதற்காக 19 கிலோ எடையில் ரூ 15 லட்சம் மதிப்பிலான வெள்ளி பல்லக்கு வழங்கும் நிகழ்ச்சி பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்லக்கை பெற்றுக் கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பல்லக்கை சுமந்து வந்தனர்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான்.. அண்ணாமலை
திமுக ஆட்சி
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சிக்கு வந்த பின் திருடப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட 282 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்டது தமிழ்நாடு காவல் துறை. மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் திருப்பணிக்கு ரூ 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர பணியாளர்கள்
பகுதி நேர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, அன்னதான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டதாக பட்டியலிட்டார். அறநிலையத் துறையில் முறைகேடு நடப்பதாகவும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து முதல் கையெழுத்திடப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்வி எழுந்தது.
அறநிலையத் துறை
அவர் கூறுகையில் அறநிலையத் துறையை கலைத்து விட்டால் கோயில்களை பராமரிப்பது யார் என கேள்வி எழுப்பினார். குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை கூறினால் பதிலளிக்கப்படும். பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாது. ஆதாரமற்ற பேச்சுக்களை பற்றி கவலைப்படவில்லை. உரிய சான்றுகளுடன் குற்றம்சாட்டினால் அதற்குரிய விளக்கங்களை அளிக்கவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம்.
அறநிலையத் துறை வாகனம்
அறநிலையத் துறை வாகனத்தை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை. இறையன்பர்களும் தெய்வங்களும் மகிழ்வுடன் இருக்கும் இந்த ஆட்சியை பற்றி குறை கூறுபவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார் அமைச்சர் சேகர் பாபு.