கொள்கையின் ஜீவ நதியே! எங்களின் உதயநிதியே! கழகத்தின் காந்தமே! பக்கம் பக்கமாக புகழ்ந்த சேகர்பாபு!
சென்னை: சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் பக்கம் பக்கமாக புகழ்ந்து கவனம் ஈர்த்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபுவுக்கு யார் எழுதிக் கொடுத்தது எனத் தெரியவில்லை, டி.ஆர்.ரை போல் கொள்கையின் ஜீவ நதியே! எங்களின் உதயநிதியே! கழகத்தின் காந்தமே என்றெல்லாம் அடுக்கினார்.

அதன் விவரம் வருமாறு;
''மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே!
இம்மாமன்றத்தில் உள்ள
அனைத்து உறுப்பினர்களின் அகரமே!
ஈரடி வள்ளுவத்தின் வழி நடக்கும் ஆறடி சிகரமே!
ஆளுநர் உரைக் குறிப்பில் நீக்கப்பட்ட
தலைவர்கள் பேரை
அவை குறிப்பில் இடம் பெற வைத்த
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே
உங்களை மகிழ்வுடன்
வணங்குகிறேன்.
அறிவுலக ஆசான் பெரியாருக்கு
என் திராவிட வணக்கம்
உரை வீச்சால் உலகளந்த
பேரறிஞர் அண்ணாவுக்கு
என் வணக்கம்.
எழுது கோலால்
தமிழ் இனத்தையே
எழ வைத்த
முத்தமிழ் அறிஞர்
நம்மோடு வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும்
வான் புகழ் கலைஞருக்கு
என் வணக்கம்.
அறநிலையத் துறையை அண்ணாந்து பார்க்க வைக்கும்
எங்கள் முதல்வருக்கு ஆயிரம் வணக்கங்கள்
என் நாடு தமிழ்நாடு
இந்தப் பெயருக்கு உலகில்
ஏதுமில்லை ஈடு
இதற்கு ஒரு அவப்பெயர் ஏற்படுமாயின்
எதிர்த்து நிற்பேன் துணிவோடு
என்று
மூவாயிரம் ஆண்டு மொழி வரலாற்றை
தோளில் சுமக்கும் எங்கள் தூயவரே.
தமிழரின் சுயமரியாதைக்கொரு
பங்கம் வரும்போது எல்லாம்
பொங்கி களமாடி புரட்டிப் போடுகின்ற
புரட்சி சரித்திரமே...!
மாமன்னர்கள் உருவாக்கிய கம்பீரமான கலைக் கோயில்கள்
முத்தமிழ் அறிஞர் கலைஞரின்
கம்பீரமான தவப்புதல்வர் கையில்
இன்று பாதுகாப்பாக உள்ளன.
தனிமனிதன் வீழலாம்
தமிழ்நாடு மட்டும் வீழவே கூடாது
என்ற உணர்வோடு செயல்படும்
இணையற்ற முதல்வரே,
இனம் காக்கும் தலைவரே.
இயங்குகின்ற தலைவராகவும்
எங்களையெல்லாம் இயக்குகின்ற தலைவராகவும்
இருக்கின்றார் எங்கள் முதல்வர்.
நிர்வாகத் திறன், கொள்கை பற்று
ஓய்வில்லா உழைப்பு இவற்றால் பெற்ற புகழால்
மயங்கி போகாத மாண்பாளர் எங்கள் முதல்வர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்
அன்னை தமிழிலே வழிபாடு செய்யலாம்
பெண்களும் ஓதுவாராகலாம்
என்று செய்து காட்டி
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த
திராவிடத் திருப்புமுனையே!
ஒரு சிட்டுக்குருவி கிளையில் உட்காரும்போது
கிளையை நம்பி உட்காருவதில்லை.
தன் சிறகை நம்பியே உட்காருகிறது.
கிளை எப்போது வேண்டுமானாலும் முறியலாம்,
பறப்பதற்குச் சிறகு இருப்பதே பாதுகாப்பானது.
இந்த பாடத்தை நாளும் எங்களுக்கு
நடத்திக் கொண்டிருக்கும்
எங்கள் நம்பிக்கை நாயகரே.
எங்கள் முதல்வரே.
எங்களின் உயிர் துடிப்பான
முதல்வருக்கு மீண்டும் என் வணக்கம்.
கொள்கையின் ஜீவ நதியே
எங்களின் உதயநிதியே
நம் வீட்டுப் பிள்ளையை
விளையாட்டாய்
நினைத்தவர்கள் வியந்திட
அடித்து விளையாடும்
ஆதவனே

ஓடுகிற நீரில்தான்
ஆக்சிஜன் அதிகம் இருக்கும் என்பது
அறிவியல் உண்மை
ஓடி ஓடி உழைக்கும்
உங்கள் செயல்பாடே கழக உயிர் மூச்சின் ஆக்சிஜன்
ரசிகர்களா, தொண்டர்களா எனப் பிரித்து பார்க்க
முடியாத அளவுக்கு
தமிழகமெங்கும் இளைஞர் பட்டாளத்தை
ஈர்த்து வைத்திருக்கும்
கழகத்தின் காந்தமே
உங்களுக்கும் என் வணக்கம்.
பட்டியல் இன மக்களுக்காக
வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட
ஐயா இளைய பெருமாள் அவர்களுக்கு
நூற்றாண்டு விழா எடுக்கும்
நம் முதல்வரை வணங்குகிறேன்.
மன்னராட்சிக் காலம்,
முன்னர் ஆட்சிக் காலம்,
எக்காலத்தையும் விட பொற்காலம்,
நம் முதல்வரின் திராவிட மாடல் காலம்.''












Click it and Unblock the Notifications