அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல கோரிக்கை வந்தால் தமிழக அரசு உதவும்.. சொல்வது அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: பக்தர்கள் கோரிக்கை வைத்தால் அயோத்தி ராமர் கோயில் செல்ல உதவி செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் 22ஆம் தேதி மதியம் 12.20 மணிக்கு நடைபெற உள்ளது. மூலவரான குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வருகிறது.
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடம், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்து தருமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பக்தர்கள் யாரும் கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை. அப்படி கோரிக்கைகள் வரும் பட்சத்தில் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ராமர் கோயிலுக்கு செல்வதற்கு தேவையான உதவிகளை செய்ய இந்து சமய அறநிலையத் துறை தயாராக இருக்கிறது." எனத் தெரிவித்தார்.
மேலும், "திராவிட மாடல் ஆட்சியில் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 17 கோயில்களுக்கும், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 8 கோயில்களுக்கும் விரிவுப்படுத்தி உள்ளோம். மேலும், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி 20 திருக்கோயில்களில் செயல்படுத்தி வருகிறோம்." என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.












Click it and Unblock the Notifications