தாமரை வளரவே கூடாது.. ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு சொன்னதை கேட்டு அதிர்ந்த IAS அதிகாரி.. கலகலப்பு!
சென்னை: இன்று சென்னை போரூரில் பசுமை பூங்காவை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, அங்கு குளத்தில் தாமரை வளர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு, தாமரை வளரவே கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்ததால் அங்கு கலகலப்பு ஏற்பட்டது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் போரூரில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பில் ஈரநிலை பசுமை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் 103 இருக்கைகள், நடைபாதை, செங்கல் நடைபாதை, கருங்கல் நடைபாதை, கூடைப்பந்து விளையாட்டு மைதானம், சிறுவர் விளையாட்டுத் திடல், 6.85 ஏக்கர் அளவில் ஏரி, திறந்தவெளி உடற்பயிற்சி மைதானம், பார்க்கிங், கழிப்பிடம், கடைகள், மின்விளக்கு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பசுமை பூங்காவில் பல்வேறு வசதிகள் அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், எப்போது பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் கூடுதலாக மின்விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வசதி குறித்து சில பரிந்துரைகளையும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது அங்கு குளத்தில் மலர்ந்திருந்த தாமரைப் பூக்களை பார்த்த அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளிடம், "தாமரை வளவே கூடாது.. இங்க என்ன இப்படி வளர்ந்திருக்கு" என கிண்டலாக கூறினார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா ஐ.ஏ.எஸ், அமைச்சரின் கிண்டல் முதலில் புரியாமல் ஏன் சார் எனக் கேட்க, அருகில் இருந்தவர்கள் சிரித்ததைப் பார்த்து, அமைச்சரின் கிண்டலை உணர்ந்து சிரித்தார். ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு, பாஜகவின் சின்னமான தாமரையை கிண்டல் அடித்ததால் கலகலப்பு ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications