பழம் தானாக பழுத்தாலும்.. தடியால் அடித்து பழுக்கவைத்தேன் என்பதா..? பாஜகவை கலாய்த்த அமைச்சர் சேகர்பாபு
சென்னை: திருக்கோயில்களை வைத்து அரசியல் செய்வது முறையாக இருக்காது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வார நாட்களில் கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், பாஜகவின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுவதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி தந்துள்ளார்.
இதனிடையே, பழம் தானாக பழுத்தாலும், அதை தாங்கள் தான் தடியால் அடித்து பழுக்கவைத்தோம் என்பவர்களுக்கு பதில் அளித்து, தனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அமைச்சர் சேகர்பாபு பாஜகவை கலாய்த்துள்ளார்.

கோயில் திறப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வார நாட்களில் மூடப்பட்டிருந்த கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை வழக்கம் போல் திறந்துகொள்ள தமிழக அரசு நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பாஜகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் கோயில் திறப்பு குறித்த தமிழக அரசின் முடிவை வரவேற்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அடி பணியாது
அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, யாருடைய அழுத்தத்திற்கும் திமுக அரசு அடிபணியாது என்றும் மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள் அடிப்படையில் துறைசார்ந்த அதிகாரிகளை வைத்து ஆய்வுக்கூட்டத்தை நடத்தி கோயில்களை திறக்க இப்போது முதல்வர் அனுமதி தந்துள்ளதாக கூறினார். எல்லா மதத்தினரும் பாராட்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார் அமைச்சர் சேகர்பாபு.

நேரம் விரயம்
கோயில்களை வைத்து அரசியல் செய்வது வெற்றி தோல்வியை தீர்மானிக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் பழம் தானாக பழுத்தாலும், அதை தாங்கள் தான் தடியால் அடித்து பழுக்கவைத்தோம் என்பவர்களுக்கு பதில் அளிப்பது வீண் வேலை எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேலும், இது குறித்து பேசுவதால் நேரம் தான் விரயமாகும் என முடித்துக்கொண்டார்.

தனிக்கட்சி
மக்களின், இறையன்பர்களின் கோரிக்கையை ஏற்றே கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் எந்தவொரு தனிக்கட்சியின் நிர்பந்தத்தின் காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முடிவை எடுக்கவில்லை எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதனிடையே கோயிலை திறந்ததற்காக முதல்வருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications