அதிமுகவுக்கு தோல்வி பயம்.. திமுக எம்எல்ஏ கார் மீது தாக்குதல்! பாயும் சேகர்பாபு.. நடந்தது என்ன?
சென்னை: ஆர்கே நகர் திமுக எம்எல்ஏ கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அதிமுக மீது சுமத்தியுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
மாநிலத்தில் ஆங்காங்கே சிறு பூசல்கள் ஏற்பட்டாலும் கூட, பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது.

கல் வீசி தாக்குதல்
நேற்று மாலை வாக்குப்பதிவு முடியும் தருணத்தில் புதுவண்ணாரப்பேட்டை சவுந்தரபாண்டி வழியில் அருகே ஆர்கே நகர் திமுக எம்எல்ஏ எபினேசர் தனது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது காரை அதிமுகவினர் சிலர் மறித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், திடீரென அவரது காரின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் சிலர் கல்வீசி உடைத்தனர்.

சம்பவ இடத்தில் சேகர்பாபு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எபினேசரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அறிந்து இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சம்பவ இடத்திற்குச் சென்று நடந்த சம்பவம் குறித்துக் கேட்டறிந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தோல்வி பயம் காரணமாகவே அதிமுகவினர் இப்படி நடந்து கொள்வதாக அமைச்சர் சேகர்பாபு பேட்டியில் சாடியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "திமுக வேட்பாளர்களின் வெற்றி உறுதியானதையடுத்து தோல்விக்கு ஏதேனும் காரணங்கள் வேண்டும் என்பதற்காக இப்படி பிரச்சினை செய்கிறார்கள். முன்னாள் சபாநாயகர், அமைச்சர் எனப் பல பொறுப்புகளில் இருந்த ஜெயக்குமார், கள்ள ஓட்டுப் போட வந்ததாகக் கூறும் நபரைப் பிடித்து சட்டையைக் கழற்றி, கைகளைக் கட்டி மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்டது மட்டுமல்லாது: அதை அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலேயே பதிவும் செய்திருக்கிறார்.

தோல்வி பயம்
அந்நபர் செய்திருந்தால் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் இப்படி நடந்திருக்கக் கூடாது. தோல்விக்கு எதாவது ஒரு காரணம் கூற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தி அரசுக்குக் களங்கம் விளைவிக்க முயல்கிறார்கள். திமுக எம்எல்ஏ எபினேசர் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அவருடன் வந்த டிரைவரையும் மற்றொரு நபரையும் தாக்கியுள்ளனர்" என்றார்.

திமுக எம்எல்ஏ
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜேஜே எபிநேசர், "அதிமுகவினர் வாக்குச் சாவடிகளில் கைப்பற்றுவதாகத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாகப் பார்வையிடச் சென்றேன். நான் வருவதைக் கண்டறிந்த அங்கிருந்த அதிமுகவினர் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் எனது காரின் ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications