அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன்.. பாஜகவுக்கு எதிராக கொந்தளித்த சேகர்பாபு!
சென்னை: அமைச்சர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம், திமுகவில் கொடி பிடித்து இடி முழக்கமிடும் ஒரு தொண்டனுக்கு கூட இணை அற்றவர் அண்ணாமலை என காட்டமாக விமர்சித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 மாதங்களில் 5 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். மீண்டும் 19ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி கோவையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். லோக்சபா தேர்தல் இன்று அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை குறி வைத்தே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

மோடி விமர்சனம்: தமிழகம் வரும் மோடி திமுகவை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். நேற்று கன்னியாகுமரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி. நமது கடந்த கால பெருமைகளையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி. அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப விடாமல் தடுத்தது திமுக அரசு என விமர்சித்தார்.
சேகர்பாபு பேச்சு: இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "இன்றைக்கு ஒரு சில தலைவர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்துவிட்டு, ஏதோ தமிழ்நாட்டில் தொடர்ந்து பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து தமிழக மக்களுக்காக உழைத்தது போலவும், தமிழக மக்களுக்கு நன்மை செய்தது போலவும் பறைசாற்றிக் கொண்டு நம் முதல்வரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாமலை மீது சேகர்பாபு காட்டம்: திமுகவில் கொடி பிடித்து இடி முழக்கமிடும் ஒரு தொண்டனுக்கு கூட இணை அற்றவர் அவர். அமைச்சர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை கொள்கை என்பது அண்ணா சொன்னது போல இடுப்பில் கட்டிய வேட்டி தான், பதவி என்பது தோளில் போட்டுக் கொண்ட துண்டு தான்.
இயக்கத்திற்காகவும், இயக்கத்தின் தலைவருக்காகவும் எதை வேண்டுமானாலும் துறப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த மேடையில் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆறுதல் சொல்ல வராத பிரதமர்: மக்களுடைய துயர் களைவதற்கு, துன்பப்படுகின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு தமிழகத்திற்கு வருவதற்கு வக்கில்லாத பாரத பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை வருகை தந்திருக்கிறார். இன்னும் இரண்டு முறை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் வருவதாக இருக்கிறார்.
மோடி என்ன தவம் கிடந்தாலும்: நான் பாஜகவினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் உங்களுடைய பாரத பிரதமர் தண்ணீருக்கு கீழ் தவம் இருந்தாலும் சரி, தரையின் மீது தவம் இருந்தாலும் சரி, அல்லது ஓடுகின்ற வாகனத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி, பறக்கும் விமானத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி தமிழ்நாடு, பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். அந்த வெற்றியை தமிழக முதல்வருக்கு பரிசாகச் சமர்ப்பிப்போம்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications