10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு 2021-இல் பொதுத் தேர்வு ரத்து?.. அமைச்சர் அளித்த பதில் என்ன?
சென்னை: 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு செய்வதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க அமைச்சர் செங்கோட்டையன் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில் கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாடங்களை விரைந்து நடத்தி முடிப்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

அமைச்சர்
அப்போது அவரிடம் அடுத்த 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்படுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதா அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து டிசம்பர் இறுதியில் முடிவு செய்வதாக அமைச்சர் தெரிவித்தார்.

10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து
கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

கல்லூரி இறுதியாண்டு
அனைவருக்கும் ஆல் பாஸ் போடப்பட்டது. அது போல் கல்லூரி இறுதியாண்டை தவிர மற்ற ஆண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் முதல்வரை மாணவர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். கடந்த முறை 10ஆம் வகுப்பு தேர்வை நடத்தினால் கொரோனா பரவும் என பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.

தமிழக அரசு ஆலோசனை
ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் இன்னும் பாடங்கள் மாணவர்களுக்கு புரியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்கள் புரியவில்லை என கூறி தற்கொலை செய்யும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பொதுத் தேர்வு என்றால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவர் என்பதால் அதுகுறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது.












Click it and Unblock the Notifications