சட்டசபை நடக்கும்போதே.. இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.. வழக்கில் முக்கிய உத்தரவு!
சென்னை: வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2011 - 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
முதற்கட்டமாக இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 150 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.

குற்றம்சாட்டப்பட்ட 2,222 பேரில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 150 ஏர் ஏற்கனவே ஆஜராகினர். இந்நிலையில் இன்று மீண்டும் ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இதையடுத்து, பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அடுத்த 150 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

அமலாக்கத்துறை வழக்கில் புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான பிறகு, தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார் செந்தில் பாலாஜி. இந்நிலையில், தற்போது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சட்டமன்றத்துக்கு வந்துள்ளார் செந்தில் பாலாஜி.












Click it and Unblock the Notifications