செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்.. ஆனா குற்றம்சாட்டப்பட்ட பலர் ஆப்செண்ட்.. நீதிபதி அதிரடி உத்தரவு!
சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
கடந்த 2011- 15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மறைந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் 2,222 மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் முதல் 100 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அவர்களின் சிலர் இன்றைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிவிட்டார். பின்னர் வழக்கின் விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications