டாக்டரை வரசொல்லுங்க! துடித்த செந்தில் பாலாஜி.. ஸ்ட்ரெச்சரில் போகும் போதே "சிபிஆர்" சிகிச்சை
சென்னை: நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டாக்டரை வரசொல்லுங்க, டாக்டரை வரச்சொல்லுங்க என வலியால் கத்தி கதறியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
போக்குவரத்து அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் ரூ 1.62 கோடி பணம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் விசாரணை நடத்தியது. அது போல் தலைமைச் செயலக அலுவலகத்தில் நடத்தப்பட்ட நீண்ட சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத் துறை அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறி நெஞ்சை பிடித்தபடியே கதறினார். உடனே ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைக்காமல் முதலுதவி சிகிச்சை அளிக்காமலும் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். காரில் இருக்கையில் படுத்திருந்த செந்தில் பாலாஜி வலியால் அழுத காட்சிகள் வைரலாகி வருகின்றன.
செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டதால்தான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக திமுகவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் காரில் படுத்திருக்கும் செந்தில் பாலாஜியை ஸ்ட்ரெச்சரில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது அவர் காரில் படுத்தபடியே டாக்டரை வரச்சொல்லுங்க என கதறினார்.
பின்னர் ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்ற போது அவருக்கு யாரோ ஒருவர் சிபிஆர் சிகிச்சை செய்து கொண்டே சென்றதும் வீடியோக்களில் வைரலாகி வருகிறது. செந்தில் பாலாஜி கண்களை கைகளால் மறைத்தபடியே அழுதுக் கொண்டே செல்கிறார். அவருக்கு என்னாச்சோ என ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு திரண்டனர். இதையடுத்து மருத்துவமனையில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications