விசாரணை தொடங்கியதுமே ட்விஸ்ட் வைத்த என்ஆர்.இளங்கோ.. அவசரப்பட்ட அமலாக்கத்துறை! நீதிபதி அதிரடி முடிவு!
சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்த நிலையில், 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று விசாரணையைத் தொடங்கினார். அப்போது வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். இதையடுத்து விசாரணை தேதியை நாளை (ஜூலை 7) முடிவு செய்வதாக அறிவித்தார் நீதிபதி சிவி கார்த்திகேயன்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, தனியார் மருத்துவமனையில் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அதே மருத்துவமனையில் அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு: இதற்கிடையே, செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி மேகலா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தனர்.
'செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் என்பதால், அவரை உடனே விடுவிக்க வேண்டும்' என்று நீதிபதி ஜெ.நிஷாபானுவும், 'செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்திருப்பது சட்டரீதியாக சரியான நடைமுறைதான்' என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி டி.பரத சக்ரவர்த்தியும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால், இந்த வழக்கில் ஒரு வார காலத்தில் 3-வது நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தியிருந்தது.
3வது நீதிபதி: இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டார். நீதிபதி கார்த்திகேயன் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணையை தொடங்குகிறார். மாறுபட்ட 2 தீர்ப்புகளில் எது சரி என்பதை, விசாரணைக்குப் பிறகு அவர் உறுதி செய்வார்.
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி மனைவி தரப்பு அதிரடியான வாதங்களை எடுத்து வைத்த நிலையில் 2 நீதிபதிகலும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் இன்று நடைபெறும் 3வது நீதிபதியின் விசாரணை அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை தொடங்கியதும் இளங்கோ கோரிக்கை: இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரணையை தொடங்கினார். அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியுள்ளார். செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தார்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தங்கள் சார்பாக ஆஜராகி வாதம் செய்வதற்காக வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கக் கோரினார் என்.ஆர்.இளங்கோ. அதற்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வழக்கை சனிக்கிழமை விசாரிக்கலாமே? என்று கேள்வி எழுப்பினார்.
அவசரப்பட்ட துஷார் மேத்தா: அதேசமயம், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டல் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, இந்த வழக்கை அடுத்து எப்போது விசாரிப்பது என்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். வழக்கமாக பட்டியலிடப்படும் வழக்குகளையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தெரிவித்தார்.
அதற்கு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தங்கள் தரப்பின் விருப்பமும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் என்றும், மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராவதற்காகவே ஒத்தி வைக்க கோருவதாக தெரிவித்தார். இதையடுத்து, விசாரணை தேதி நாளை (ஜூலை 7) முடிவெடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications