"குரங்குகள்" பத்திரிகையாளர்களை திட்டிய அண்ணாமலை.. டைமிங்கில் செந்தில் பாலாஜி பதிவிட்ட ட்வீட்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை குரங்குகள் என்று விமர்சித்துள்ளது பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் விபத்து சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார். அப்போது அண்ணாமலை பற்றி பேசிய செந்தில் பாலாஜி, ராணுவ வீரர் உயிரிழப்பை அரசியலாக்க முயற்சித்த நபர் தான், கோவை கார் வெடிப்பு சம்பவத்தையும் அரசியலாக்குகிறார்.
தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். காவல் துறையினர் விசாரணை அறிக்கை வெளியிடும் முன்பே, விசாரணை தொடர்பான தகவல்களை அண்ணாமலை வெளியிடுகிறார் என்றால் அவரிடம் தாம் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கு அடிப்படை அரசியலில் பக்குவம் இல்லை, புரிதலும் இல்லை என்று விமர்சித்திருந்தார்.

அண்ணாமலை விமர்சனம்
இதுகுறித்து கடலூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் எழுப்பி எழுப்பினார். அதனால் கோபமடைந்த அண்ணாமலை, செய்தியாளர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையான பேசினார். செய்தியாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டும், அமைச்சர் செந்தில் பாலாஜியை நாய், பேய், சாராயம் விக்கிறவன் என்று ஒருமையிலும் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்ன பேசினார் அண்ணாமலை?
பத்திரிகையாளர்களின் கேள்வியால் கோபமடைந்த அண்ணாமலை, மரத்தின் மீது குரங்கு தாவுவதைப் போல் ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள். நான் என்ன சொன்னேன். நீங்கள் சாப்பிடுங்கள். நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன். இப்படி வந்ததும் ஊரில் நாயி, பேயி, சாராயம் விக்கிறவன் சொல்றதை எல்லாம் நான் கேட்டு அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்க என்று செய்தியாளர்களையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.

செந்தில் பாலாஜி ட்வீட்
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்று பதிவிட்டுள்ளார்.

தொடரும் சர்ச்சைகள்
சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து அண்ணாமலை வந்தபோது, பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்கள் மீது அக்கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது பத்திரியாளர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் சில மாதங்களுக்கு முன் யூ ட்யூப் சேனல்கள் பற்றி அண்ணாமலை பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பத்திரிகையாளர்களை நேரடியாக குரங்குகள் என்று விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications