100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆதார் இணைப்பு கட்டாயமா? அமைச்சர் செந்தில் பாலாஜி தந்த முக்கிய தகவல்
சென்னை: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இலவச மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு மின்சார துறை சார்பில் பல்வேறு தரப்பினருக்கும் மானிய விலையிலும் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.
அதேபோல வீடுகளுக்கும் கூட முதல் 100 யூனிட்கள் இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது.

ஆலோசனை
இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மின் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி
இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "வடகிழக்கு பருவமழை இப்போது தொடங்கி உள்ளது. பொதுமக்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் மின் வினியோகம் செய்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஜூலை முதல் பழுதடைந்த நிலையில் இருந்த 44 ஆயிரம் மின்கம்பங்கள் முழுமையாக மாற்றப்பட்டு உள்ளது.

நடவடிக்கை
மழை பெய்த இடங்களில் மின் வினியோகத்தில் எதாவது சிக்கல் இருந்தால் பொதுமக்கள் அது தொடர்பாக உடனடியாக புகார் அளிக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் விரைந்து விசாரணை நடத்தப்படும். கனமழை இருந்த சீர்காழி பகுதியில் 36 மணி நேரத்திற்குள் தேசமடைந்த மின் சாதனங்கள் மாற்றப்பட்டு, மின் வினியோகம் மீண்டும் வழங்கப்பட்டது.

மழை பெய்தாலும்
46 டிரான்ஸ்பர்கள் முழுமையாக மாற்றப்பட்டு உள்ளன. திருச்சி, தஞ்சாவூர் என அண்டை மாவட்டங்களில் இருந்தும் கூடக் கூடுதலாக ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு, பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது. மழை பெய்தாலும் கூட பொதுமக்களுக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழைக் காலம் என்பதால் மின்சார ஒயர்கள் தொடர்பாக நாம் கவனமாகவே இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு மின்சாரம்
இப்போது 100 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் விநியோகம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை முதல்வர் வழங்கினார். மீதமுள்ள விவசாயிகளுக்கும் விரைவில் மின் இணைப்புகள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் விரைந்து நடந்து வருகிறது.

பொய்யான தகவல்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்கி உள்ளோம். இது குறித்து மின் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மூலம் மெசேஞ்கள் அனுப்பப்படுகிறது. மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைத்தால் தான் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் எனச் சிலர் இணையத்தில் திட்டமிட்டு பொய்யான தகவல்கள் பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் பொய்யான தகவல். இதற்கும் இலவச மின்சாரத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

ஆதார் இணைப்பு
அதேபோல ஒருவர் பெயரில் 3, 4 மின் இணைப்புகளை வைத்துள்ளார் என்றால், ஆதார் எண் இணைக்கப்பட்ட உடன் ஒரு இணைப்பிற்கு மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் பொய்யான தகவல் பரவுகிறது. ஆதார் இணைப்பிற்கு பிறகும் கூட அவரிடம் இருக்கும் அனைத்து மின் இணைப்புகளுக்குமே இலவச மின்சாரம் வழங்கப்படும். மின் வாரியத்திடம் மின் நுகர்வோர் குறித்த தகவல்கள் இல்லை. அதைப் பெறவே ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை" என்றார்.












Click it and Unblock the Notifications