என்னாது ஆயிரம் கோடியா.. டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர் ரூ.96 கோடி மட்டுமே.. செந்தில் பாலாஜி விளக்கம்!
அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கான டெண்டர் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அறப்போர் இயக்கம் சொல்வது போல் ரூ.1,000 கோடி இல்லை என்று கூறியுள்ள செந்தில் பாலாஜி, குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அறப்போர் இயக்கம் தரப்பில் ரூ.1,000 கோடி மதிப்பிலான டாஸ்மாக் பாக்ஸ் டென்டர்களை ரத்து செய்ய அறப்போர் கோரிக்கை வைத்திருந்தது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் குடோனில் இருந்து கடைகளுக்கு எடுத்து செல்லும் போக்குவரத்து டெண்டர்கள் மண்டல ரீதியாக 43 டெண்டர்கள் கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் போடப்பட்டுள்ளது.

பாக்ஸ் டெண்டர் நோக்கன் என்ன?
ஈ டெண்டர் போடாமல் தொடர்ந்து பாக்ஸ் டெண்டர் போடும் டாஸ்மாக்கின் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈ டெண்டர் போடாமல் அவர் துறையில் வேண்டுமென்றே பாக்ஸ் டெண்டர் போடுவதன் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு கூற வேண்டும். பாக்ஸ் டெண்டர் ஊழலுக்கு வழிவகை செய்யக்கூடியது என்பது நன்றாகத் தெரிந்தும் அவர் துறை ஏன் இதைத் தொடர்ந்து செய்கிறது என்பதை கூற வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
தமிழ்நாடு அரசு உடனே இந்த டெண்டர்களை ரத்து செய்து முழுமையான ஈ டெண்டர்களை போட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இது தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதில், மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே.

ரூ.1,000 கோடி டெண்டரா?
அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது.

சட்டப்பூர்வ நடவடிக்கை
அரைகுறையான - உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் வெளியிட்டிருக்கிறது விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டியுள்ளது. இதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக அறப்போர் இயக்கம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications