செந்தில் பாலாஜிக்கு உடலில் பல பிரச்சனைகள்.. நடந்தாலே மயங்கி விழுகிறார்.. அமைச்சர் மா.சு தகவல்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது என்றும், மன அழுத்தம் காரணமாக பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் விசாரணை நடைபெற்று வந்தது. அமலாக்கத் துறை அதிகாரிகள், அதிரடியாக சோதனை மேற்கொண்டு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு 8 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நவம்பர் 14 ஆம் தேதி இரவு முதல் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் செந்தில் பாலாஜி நவம்பர் 16ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், மூலைக்கு செல்லும் ரத்தக்குழாயிலும் அடைப்பு இருப்பது சமீபத்திய மருத்துவ சோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று (நவம்பர் 22) மீண்டும் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 11 ஆவது முறையாக நீட்டித்து, டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது. மன அழுத்தம் காரணமாக பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், செந்தில் பாலாஜிக்கு 2 கால்களும் அடிக்கடி மரத்துப் போவதால், தொடர்ந்து பிசியோதெரபி செய்ய வேண்டியுள்ளது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சையில் நலமுடன் இருக்கிறார் என்றும், தேவைப்படும்போது அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications