செந்தில் பாலாஜி மனைவி, தம்பிக்கு எஸ்எம்எஸ் அனுப்பினோம்.. அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்! என்ன நடந்தது?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தகவலை எஸ்எம்எஸ் மூலம் அவரின் உறவினருக்கு தெரிவித்தோம் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து உள்ளார். அதன்படி என் கணவரை சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர். அவரின் கைதுக்கான காரணத்தை கூறவில்லை என்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தனியாக ஆட்கொணர்வு மனு தாக்கலில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் வரும் 27ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை செந்தில் பாலாஜியிடமோ, என்னிடமோ கூறவில்லை என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம் வைத்துள்ளது.

இந்த வாதத்திற்கு அமலாக்கத்துறை தனது பிரமாண பத்திரம் மூலம் பதில் அளித்துள்ளது. நாளை மறுநாள் அமலாக்கத்துறை இந்த வழக்கில் வாதம் வைக்க உள்ள நிலையில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தகவலை எஸ்எம்எஸ் மூலம் அவரின் உறவினருக்கு தெரிவித்தோம் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அதில், விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சில இணை குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற சாட்சிகள் தெளிவாக சுட்டிக்காட்டியதிலிருந்து, பணமோசடி குற்றத்தில் அமைச்சர் குற்றவாளி என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. அதனால்தான் கைது செய்தோம்.
2014-15ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாய்ப்பு மோசடியில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. அவர் அவ்வளவு பெரிய பண வைப்புத்தொகையை பெற்றது எப்படி என்பதை நிரூபிக்கவில்லை. அவரது உண்மையான வருமானத்தில் இருந்துதான் அந்த பணம் வந்தது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கைது நியாயம் ஆனதே.
கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த காரணங்கள் அவருக்கு வாசிக்கப்பட்டன, ஆனால் அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே, இரண்டு சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் கைது உத்தரவு/மெமோ நிறைவேற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட போது அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனியாக வசித்து வந்ததாலும், அவரது உறவினர்கள் கரூரில் இருப்பதாகவும் கூறப்பட்டதால், அமலாக்கத்துறை நள்ளிரவு 1:41 மணியளவில் அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அண்ணி நிர்மலா ஆகியோருக்கு போன் செய்தது. கைது செய்யப்பட்டதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும், ஆனால் அவர்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் அவர்களிடம் தெரிவிக்க முடியவில்லை.
உடனடியாக, ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை 1:44 மணிக்கு எஸ்எம்எஸ் மூலம் அசோக்குமாருக்கு கைது செய்யப்பட்ட தகவலை அனுப்பினோம். அதேபோல் அவரின் குடும்பத்தினர் இமெயில் ஐடிக்கு மெயின் அனுப்பினோம். கைது செய்யப்பட்ட தகவல் அமைச்சரின் மனைவி, சகோதரர் மற்றும் அவரது ஆடிட்டர் சதீஷ்குமார் ஆகியோருக்கு காலை 8:12 மணிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை கூறியுதுள்ளது.












Click it and Unblock the Notifications