தனக்குத்தானே "கண்ட்ரோல் இல்லை" ஜெயக்குமாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த நச் பதிலடி!
சென்னை: கரூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்குதானே 'கண்ட்ரோல் இல்லாதவர்கள்' சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருவதாகவும், குற்றத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

ஜெயக்குமார் குற்றச்சாட்டு
குறிப்பாக அணில், அமாவாசை உள்ளிட்ட பெயரில் அழைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி காவல்துறை, மாவட்ட ஆட்சியர் ஆகியோரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கரூர் மாவட்டத்தை ஆட்டிப் படைக்கிறார். கரூரில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த 19ம் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கார் மீது ஆசிட் மற்றும் கற்களை வீசிவிட்டு அதிமுகவை சேர்ந்த திருவிகா என்பவர் கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டார்.

பொய் வழக்குகள்
இந்த விவகாரத்தில் போதுமான ஆதாரங்கள் இருந்தும் காவல்துறையினர் கடத்திய நபர்கள் மீது வெறும் வழக்குப்பதிவு மட்டுமே செய்து, அதிமுகவினர் 72 பேர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக செந்தில்பாலாஜி உத்தரவின் பேரில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியினர் குற்றத்தில் ஈடுபட்டால் வெறும் வழக்குப்பதிவு மட்டுமே. ஆனால் எதிர்க்கட்சியினர் குற்றத்தில் ஈடுபடாவிட்டாலும் பொய் வழக்கு போட்டு கைது செய்வார்கள்.

ஆளுங்கட்சிக்கு சட்டமில்லை
ஆளுங்கட்சிக்கு சட்டமில்லை. எதிர்க்கட்சிக்கு மட்டுமே சட்டம் உண்டு. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரம் இருப்பதால் ஆடுகிறார். அவரின் பேச்சை கேட்டு அதிகாரிகளும் ஆடுகிறார்கள். தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம். வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக டிஜிபி தெரிவித்தார் என்று தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி
இந்த நிலையில் ஜெயக்குமாரின் பேச்சுக்கும், புகாருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், கரூர் மாவட்டத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அதிமுக, எப்படியாவது செய்திகளில் இடம் பெற்றுவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

கண்ட்ரோல் இல்லாதவர்கள்
'கரூரில் கண்ட்ரோல் இல்லை' என 'மெயின்ரோடு' என்று எல்லோராலும் புகழப்படுகிற திரு.ஜெயக்குமார் பேசியிருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தனக்குதானே 'கண்ட்ரோல் இல்லாதவர்கள்' சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications