பாஜக ஐ.டி விங் தலைவருக்கு எதிராக அமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
சென்னை : டாஸ்மாக் விற்பனை தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்துகளுக்காக தமிழ்நாடு பாஜகவின் ஐ.டி விங் தலைவர் நிர்மல் குமார் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையில், இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டி தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் நேர்காணலும் அளித்திருந்தார். இதையடுத்து தன் மீது அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார். இந்த விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகவும் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை நீக்கி விட்டால் இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பாஜக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தரப்பு வழக்கறிஞர், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஒத்திவைத்தார்.
விமானத்தில் அவசர கால கதவு திறக்கப்பட்ட விவகாரம்.. அண்ணாமலை சொல்வது பச்சை பொய்.. செந்தில் பாலாஜி