மின் வாரிய கட்டண உயர்வு.. பொதுமக்களே ஏத்துக்கிட்டாங்க.. அப்புறம் என்ன.. செந்தில் பாலாஜி
சென்னை: மின் கட்டண உயர்வை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின்கட்டணம் 8 ஆண்டுகள் கழித்து உயர்ந்துள்ளது. ஏற்கெனவே பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் அந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பலதரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை
இந்த நிலையில் சென்னையின் வடக்கு மின் பகிர்மான வட்ட சிறப்பு ஆய்வு கூட்டம், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாதவரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மின் பயன்பாட்டை பொருத்தமட்டில் உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் இடையே அதிக வேறுபாடு உள்ளது.

மின் கட்டணம்
இதை குறைக்கும் வகையில் மின் கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய மின் கட்டண உயர்வின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்றால், 60 நாட்களில் 10 நாட்களுக்கு பழைய கட்டணமும் மீதமுள்ள 50 நாட்களுக்கு புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.

மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வு தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தின் மூலம் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் வெறும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே புகார் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையினர் உத்தேசிக்கப்பட்ட அளவை ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறை
அது போல் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் திமுக தேர்தல் அறிக்கையிலேயே ஊழல் செய்த அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெளிவாக கூறியிருக்கிறோமே. அதன்பேரில்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications