பில் இருந்தா படக்குனு காட்ட வேண்டியதுதானே.. இப்போதான் தயார் ஆகுதா? - அண்ணாமலையை விளாசிய அமைச்சர்!
சென்னை : பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் தான் அணிந்திருக்கும் கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
திமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில் அண்ணாமலையின் கைக்கடிகாரம் 5 லட்சம் ரூபாய் என்றும் அதன் ரசீதை அவரால் காட்ட முடியுமா? என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்திருந்தார்.
தற்போது வரை ரஃபேல் வாட்ச்சிற்கான ரசீதை அண்ணாமலை வெளியிடாத நிலையில், இன்று மாலைக்குள் ரசீதை வெளியிட வேண்டும் என மீண்டும் கெடு விதித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சனிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அவர் கையில் கட்டியுள்ள விலை உயர்ந்த வாட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ரபேஃல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. அதில் ஒரு வாட்ச் தான் இது. நான் ஒரு பெரிய தேசியவாதி. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை, அதனால், அந்த ரஃபேல் வாட்ச்சை கட்டியிருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்
அண்ணாமலையின் பேச்சை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, "பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரஃபேல் வாட்ச்சை, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாட்ச் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம். வெளிநாட்டு வாட்ச்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

அண்ணாமலை சொன்ன பதில்
அதற்கு பதில் அளிக்கும் வகையில் ட்வீட் செய்த அண்ணாமலை, பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்படும் முன்பே ரஃபேல் கடிகாரத்தை வாங்கிவிட்டேன். வாட்ச் வாங்கியதற்கான ரசீது என்னிடம் உள்ளது, நான் பாதயாத்திரை தொடங்கும்போது அனைத்து விவரங்களையும் சமர்ப்பிக்கிறேன். 10 வருடங்களுக்கான எனது வங்கி பரிவர்த்தனைகள், ஆடு, மாடு விவரங்களையும் கூட நான் வெளியிட தயாராக உள்ளேன். ஒரு பைசாவுக்கு கூடுதலாக நான் சொத்து சேர்த்ததை நிரூபித்தால் எனது சொத்து முழுவதையும் அரசிடம் வழங்க தயார் எனத் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த மாதம் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 50,000 இலவச மின் இணைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்குப் பின்னர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அண்ணாமலையின் வாட்ச் குறித்தும், அவர் விடுத்த சவால் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பில்-லை காட்ட சொல்லுங்க
அதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக அரசு சிறப்பாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு வரும் நிலையில், தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இல்லாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அவரிடம் நான் கேட்ட கேள்வி, வாங்கிய கடிகாரத்திற்கு பில் இருக்கிறதா? இல்லையா என்று தான். தேர்தலுக்கு முன் வாங்கினாரா இல்லை பின்னர் வாங்கினாரா என்பதை எல்லாம் பில்லை காட்ட சொல்லுங்கள்.

இன்று மாலைக்குள் - செந்தில்பாலாஜி கெடு
பில்லை ஒரு மணி நேரத்தில் வெளியிடச் சொன்னேன், ஒருநாள், ரெண்டு, நாள், மூணு நாள் ஆகிவிட்டது. மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் இருக்காது. அவருக்கு மடியில் கணம் உள்ளது. உங்களிடம் பில் இருந்தால் ஒரு நிமிடத்தில் வெளியிட்டு விட்டு போகலாமே? நான் தூய்மையான அரசியல்வாதி என நிரூபிக்கலாமே? முதலில் நீங்கள் நேர்மையாக இருங்கள். பாஜக தலைவர் அண்ணாமலை முடிந்தால் இன்று மாலைக்குள் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும்.

பில் தயாராகுது
அந்த வாட்ச்சை எந்த கடையில் எந்த விலைக்கு வாங்கினார் என்பதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். அந்த கடிகாரம் யாரிடமோ வெகுமதி வாங்கியது.. அதனால் வெளியிட முடியவில்லை. அந்த கடிகாரத்திற்கான பில் தற்போது தயாரிக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது, அதனை வெளியிடும்போது அடுத்தகட்ட குற்றச்சாட்டுகளை நான் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications