தமிழகத்தில் 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! தொழில்துறையின் இலக்கை அறிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: தமிழகத்தில் 46 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதால தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறும் நிலையில் கொள்கை விளக்கக் குறிப்பில் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

46 லட்சம் பேருக்கு
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 19.02 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2021-22ம் நிதியாண்டில் 21.79 லட்சம் கோடி ரூபாயாக வேகமாக உயர்ந்துள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில், 48.1 பில்லியன் டாலராக இருந்த (மாநில உள்நாட்டு உற்பத்தியில் 18%), மாநில உற்பத்தித் துறையின் பங்களிப்பை, 2030-31-ஆம் நிதியாண்டில், 250 பில்லியன் டாலர் (மாநில உள்நாட்டு உற்பத்தியில் 25%) அளவிற்கு உயர்த்துவதற்கான வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இலக்கினை அடைய 23 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 இலட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

8 பூங்காங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில், மருத்துவ சாதனங்கள் பூங்கா, மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய இடங்களில் உணவுப் பூங்காக்கள் மாநல்லூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் முறையே மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர்திறன் பூங்கா பிள்ளைப்பாக்கம் மற்றும் மாநல்லூரில் மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள் விருதுநகரில் ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளிப் பூங்கா
பனப்பாக்கத்தில் தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித் தொகுப்புகள் சென்னை, நந்தம்பாக்கத்தில் நிதி நுட்ப நகரம்.

ஊடகம் மூலம்
ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு - முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை அறியச் செய்திட, சமூக ஊடகங்கள், மின்னியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக மாநிலத்தின் முதலீட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பரவச் செய்தல்.

அரசு திட்டம்
வழிகாட்டி நிறுவனம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தவிர்த்து, அனைத்து நிறுவனங்களின் முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்த்திடுவதற்கான முகமையாகும். மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள், இரசாயனங்கள், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், கனரக பொறியியல், தோல் பொருட்கள், ஆடைகள், நிதிச் சேவைகள், தகவல் தொழில் நுட்பம், தகவல் சேவைகள் போன்ற துறைகளிலும்,தொழில் நுட்பம் சார்ந்த வகையில் தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்த, கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், புதிய தொழில் பூங்காக்களை அமைத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

என்னென்ன நிறுவனங்கள்
2021-22-ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.40 சதவீதம் ஆக உள்ளது. ஹீண்டாய், ப்யூஜோ, BMW, டெய்ம்லர், கேட்டர்பில்லர், அசோக் லேலண்ட், TVS, ரெனால்ட் நிஸ்ஸான், ஃபாக்ஸ்கான், டெல்டா, டெல், HP, சால்காம்ப், சியட், சாம்சங், மிச்செலின், MRF, கிரண்ட்ஃபோஸ், வெஸ்டாஸ், நார்டெக்ஸ், ஹிட்டாச்சி மற்றும் L&T போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள், தங்களது உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. சமீபத்தில், ஓலா எலக்ட்ரிக், டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஃபர்ஸ்ட் சோலார் மற்றும் பெகாட்ரான் போன்ற புதிய நிறுவனங்களையும் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

புள்ளி விவரங்கள்
இவை மட்டுமின்றி, தமிழ்நாடு அதிக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வரும் மாநிலமாகவும் திகழ்கிறது. 80-க்கும் மேற்பட்ட குளோபல் பார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. 2019-ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் இது 33.33 சதவீதம் வளர்ச்சி ஆகும். அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களும் தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளன. உலகாவிய முதலீட்டு மையமாக தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications