மீண்டும் விலையில்லா லேப்டாப் திட்டமா? சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன தகவல்!
சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
2024-2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. அப்போது, பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.

தமிழ்நாட்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கம் வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 ஆயிரமும், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டு வந்தது.
அதேபோல, அதிமுக ஆட்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பாக லேப்டாப் வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டுவரை சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டிருக்கின்றன.
கொரோனா தொற்று காரணமாக, அதிமுக ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. மாணவர்களை ஊக்குவிக்கும் லேப்டாப் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டதாகவும் அதிமுக கடுமையாக விமர்சித்தது.
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவித் திட்டம் பெண்களின் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றியமைக்கப்படுவதாக கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/ பட்டயப்படிப்பு/ தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக்கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு புதுமைப்பெண் திட்டம் எனப் பெயர் சூட்டப்பட்டு, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவிகள் அனைவருக்கும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் மாதம்தோறும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத் திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டீர்கள் எனக் குற்றம்சாட்டினார்.
தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்தி விட்டீர்கள், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டீர்கள், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை எல்லாம் நிறுத்தி விட்டீர்கள் என எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, "தாலிக்குத் தங்கம், இலவச லேப்டாப் திட்டங்களை உங்கள் ஆட்சியிலேயே பலருக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துவிட்டுத்தான் சென்றீர்கள். நாங்கள் அதை நிறுத்தியதாக கூறுவது தவறு. தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்படவில்லை. அந்த நிதி தற்போது புதுமைப்பெண் திட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டுக்கு என்ன தேவையோ அதை தேவைக்கேற்ப மேம்படுத்திக் கொள்வதுதான் முதிர்ச்சி அடைந்த சமூகத்திற்கான அடையாளம். மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்கிறீர்கள். நாங்கள் அதை நிறுத்தவில்லை. உலகளவில் செமி கண்டெக்டர்ஸ் பெறுவதில் சிக்கல் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "மீண்டும் மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமா?" எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்து முதல்வரிடம் ஆலோசித்து, நிதி நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications