இப்பவே இப்படினா பாஜக திரும்ப ஆட்சிக்கு வந்தா மக்களின் நிலைமை என்ன ஆகும்? டிஆர்பி ராஜா ஒரே போடு!
சென்னை: பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், தனது வாகனத்தில் சோதனை செய்த அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததற்கு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு நிலைக்குழு அமைக்கப்பட்டு 3 ஷிஃப்டுகளாக இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு அணி குழு தலைவர் தலைமையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமை காவலர், ஒரு காவலர் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் உடன் வாகன சோதனை நடத்தப்படுகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் காரையும் நிறுத்தி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது திருப்பூரில் இருந்து வந்த திருப்பூர் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் வந்த காரையும் கண்காணிப்பு நிலைக் குழுவினர் வாகன சோதனைக்காக நிறுத்தினர். அப்போது காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நிறுத்தியதோடு, வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க ஏபி முருகானந்தம் மறுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு ஏ.பி. முருகானந்தம் மிரட்டினார். அதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் மற்ற காவலர்களும் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறவே, அவரது பெயரை கூறுமாறு வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.
அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுவதாக கண்காணிப்பு நிலைக் குழுவினர் கூறியதால், ஆத்திரமடைந்த பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், "மரியாதையாக பேசி பழகுங்க.. உங்க எல்லோரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன்" என்று பகிங்கிரமாக மிரட்டினார்.

அப்போது போலீசார், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறியபோது, தொடர்ந்து மிரட்டல் விடுத்த வேட்பாளர் ஏபி முருகானந்தம், எத்தனை இடத்தில் சோதனை செய்வீர்கள் என்று கேட்டதோடு, மிரட்டுகிறீர்களா? மிரட்டுமாறு உங்களிடம் யாராவது கூறி உள்ளனரா?" என்று கேட்டு தொடர்ந்து மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
பாஜக திருப்பூர் தொகுதி வேட்பாளர் ஏபி முருகானந்தம் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காததோடு, காவல்துறை மற்றும் கண்காணிப்பு குழுவினரை வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்திற்கு அலைய விடுவேன் என்று மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது.
இந்நிலையில் பாஜக திருப்பூர் தொகுதி வேட்பாளர் ஏபி முருகானந்தம், கண்காணிப்பு நிலைக் குழுவினரை மிரட்டும் வகையில் பேசிய செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
"எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப் படுகிறது... ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது. அதிகாரிகளின் பணி அதுவே என்று அதை மதித்து முழுமையாக ஒத்துழைப்பது நமது கடமை! அந்தக் கடமையிலிருந்து நான் தவறுவதில்லை. மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிகாரிகள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல!
அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை! இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்? சிந்தியுங்கள்!" எனத் தெரிவித்துள்ளார் டிஆர்பி ராஜா.












Click it and Unblock the Notifications