“இண்டிகோ விமானம் தான் மோசம்னு பார்த்தா அவங்க பஸ் அதுக்கு மேல”.. கலாய்த்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
சென்னை: "ஏசி குறைபாடு காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானத்திற்கு உள்ளேதான் தாய்மார்களும், வயதானவர்களும் புழுக்கத்தை எதிர்கொள்கின்றனர் என நினைத்தால், அவர்களுடைய பேருந்தின் நிலைமை அதைவிட மோசமாக உள்ளது." என திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ ஏர்லைன்ஸ். குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் விமான சேவைகளை இயக்கி வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் இந்திய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதால் இந்த விமானத்துக்கு பயணிகள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம்.

அதேசமயம், பாதுகாப்பு குறைபாடு, தாமதமாக புறப்படுதல், தாமதமாக வந்து சேருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் இண்டிகோ விமானம் எதிர்கொண்டு வருகிறது. மேலும், இண்டிகோ விமானங்களில் ஏசி குறைபாடு இருப்பதாகவும் பயணிகள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், அண்மையில் தமக்கு அழுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதாக பயணி ஒருவர் வழக்கு தொடர்ந்து, இண்டிகோ நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்திலும் ஏசி வேலை செய்யவில்லை. அந்த நிறுவனத்தின் பேருந்திலும் ஏசி வேலை செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் பேருந்தில் காத்திருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் பகிர்ந்து இண்டிகோ நிறுவனத்தை விமர்சித்துள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.
இது தொடர்பாக டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வணக்கம். பாதுகாப்பு குறித்த உங்கள் அக்கறை எங்களுக்குப் புரிகிறது. உங்கள் ATR விமானத்தின் ஏசி குறைபாடு காரணமாக தாய்மார்களும் வயதானவர்களும் மூச்சுத் திணறல் அடைந்து மிகவும் விரக்தியடைந்துள்ளனர். உங்கள் பேருந்து இதைவிட மோசமாக உள்ளது. பயணிகள் நீண்ட நேரமாக பேருந்தில் காத்திருந்து மீண்டும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறார்கள். பேருந்து ஓட்டுநர் பேருந்தை குளிர்விக்க நிழலில் நிறுத்தியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் பதிவுக்கு கீழே பலரும் தங்களது ஆதங்கத்தையும் கொட்டி வருகின்றனர். எத்தனை முறை புகார் சொன்னாலும், இண்டிகோ நிறுவனம் இதை கண்டுகொள்ளாது என்று பலரும் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications