அடுத்தாண்டும் சென்னையில் ஃபார்முலா 4 ரேஸ் நடக்குமா? வந்து விழுந்த கேள்வி- உதயநிதி தந்த தெளிவான பதில்
சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 ரேஸ்கள் கடந்த இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே பார்முலா 4 ரேஸ் தொடர்பாகச் சற்று நேரத்திற்கு முன்பு அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசினார். பார்முலா 4 ரேஸுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததாகத் தெரிவித்த அவர், அடுத்தாண்டு இந்த ரேஸ் நடக்குமா என்பது குறித்தும் முக்கிய பதிலை அளித்தார்.
சென்னையில் பார்முலா 4 ரேஸ் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதலில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் இந்த ரேஸ் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருப்பினும், கனமழை காரணமாகக் கடைசி நேரத்தில் ரேஸ் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 நாட்கள் இந்த ரேஸ் சென்னை தீவுத்திடலில் நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் ஃபார்முலா 4, இந்தியன் ரேசிங் லீங் உள்ளிட்ட பந்தயங்கள் இதில் நடத்தப்பட்டது.
ஃபார்முலா 4: இந்தச் சூழலில் ஃபார்முலா 4 ரேஸ் தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சற்று நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசினார்.ஃபார்முலா 4 ரேஸ் மூலம் சென்னைக்குப் பெருமை கிடைத்துள்ளது என நம்புகிறேன் என்ற அவர், தமிழ்நாடு விளையாட்டுத் துறை வரலாற்றில் இந்த கார் ரேஸ் சிறந்த இடத்தை பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
சென்னைக்குப் பெருமை: இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பொது மக்கள் இந்த பந்தயத்திற்குப் பெரிய ஆதரவைக் கொடுத்துள்ளனர். பெருமளவு இந்த கார் பந்தயத்தைப் பொதுமக்கள் நேரில் வந்து பார்த்து ரசித்துள்ளனர். சென்னைக்கு இந்த கார் ரேஸ் மூலம் மிகப் பெரிய பெருமை கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. கார் ரேஸில் பங்கேற்ற அனைவரும் தங்கள் திறமைகளைக் காட்டியுள்ளனர். இந்த நிகழ்வு தமிழ்நாடு விளையாட்டுத் துறை வரலாற்றில் சிறந்த இடத்தை பிடிக்கும் என நம்புகிறோம்" என்றார்.
அடுத்தாண்டு நடக்குமா: சென்னை பந்தயத்திற்கு 2027 வரை எஃப்ஐஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தாண்டு இந்த ரேஸ் நடக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, "இந்த ரேஸ் கடந்தாண்டு நடக்க வேண்டிய ரேஸ்.. கடந்தாண்டு மழை காரணமாகக் கடைசி நேரத்தில் ரேஸ் ரத்து செய்யப்பட்டது. இந்தாண்டு போட்டி எந்தளவுக்கு மக்களிடையே சென்று சேர்ந்துள்ளது. இதற்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது ஆகியவை குறித்துப் பேசி முதல்வரின் ஆலோசனைபடி முடிவு எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "போட்டி சிறப்பாக நடந்தது. சென்னை மக்கள் பெருந்திரளாக நேரில் வந்து போட்டியைக் கண்டு ரசித்தனர். பலர் டிக்கெட் கிடைக்காமல் கூட திரும்பிப் போய் உள்ளனர். நேற்றைய தினம் 500 பேர் இந்த ரேஸை இலவசமாகப் பார்க்க வாய்ப்பு தரப்பட்டது. சிறப்பான முறையில் போட்டி நடத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களாலேயே நேற்றைய தினம் ரேஸ் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. எஃப்ஐஏ சான்றிதழ் இல்லாமல் போட்டியை நடத்த முடியாது. நீதிமன்றமும் அதைத் தான் கூறியிருந்தது. அந்த சான்றிதழுக்காகவே காத்திருந்தோம்.
சிறப்பாக நடந்துள்ளது: சென்னையில் முதல்முறையாக ஃபார்முலா 4 போட்டியை நடத்தியுள்ளோம். முதல்முறை நடத்தும் போது சில சில பிரச்சினைகள் இருக்கும். ஆனால், அதையெல்லாம் தாண்டி போட்டியை மிகச் சிறப்பாக நடத்தியுள்ளோம். இன்றைய தினம் போட்டிகள் அனைத்துமே திட்டமிட்டபடி நடந்தது. காலை முதல் இரவு வரை திட்டமிட்டபடி நடந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications