14 லட்ச ரூபாய் சைக்கிள் இலவசம்!... ஆச்சரியத்தில் ஆழ்ந்த வீராங்கனை - தபித்தா பேட்டி
சென்னை: மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சைக்கிள் வீராங்கனை தபித்தா. குடும்ப வறுமையால் தனது பயிற்சிக்குத் தேவையான சைக்கிளை வாங்க முடியாமல் தவித்து வந்தார்.
சைக்கிள் என்றால், ஏதோ 5 ஆயிரம் 10 ஆயிரம் இல்லை. 14 லட்சம். இவ்வளவு ரூபாய் மதிப்புள்ள சைக்கிளை இலவசமாக வாங்கி கொடுத்திருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்த இளம் வீராங்கனையின் கனவை நிறைவேற்றித் தந்துள்ளார். துயரத்தால் துவண்டு போய் இருந்த தபித்தாவின் மனதில் போது நிற்காமல் மகிழ்ச்சி மழை பெய்துகொண்டிருக்கிறது.
அமைச்சர் உதயநிதி செய்த உதவி குறித்து அவரிடம் பேசினோம். "நான் மேட்டுப்பாளையத்தில் வருகிறேன். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். என் அம்மா வீட்டு வேலை செய்து வருகிறார். என் அண்ணன் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். என் அப்பா இப்போது உயிரோடு இல்லை. என் குடும்பம் ரொம்ப சராசரியான குடும்பம்.
எனக்கு சைக்கிளிங் மேல் அதிக ஈடுபாடு. அதில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆசை. நான் இதற்கு முன்பாக மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடந்த போட்டிகளில் பங்கேற்று நிறையப் பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். தங்கம், வெள்ளி போன்ற பதங்கங்களைப் பெற்றிருக்கிறேன்.

தினமும் பயிற்சி எடுத்தால்தான் சைக்கிளிங் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற முடியும். ஆனால் எனக்கு என்று சொந்தமாகச் சைக்கிள் இல்லை. ஆகவே என் சீரியர்ஸ் நிறையப் பேர் சைக்கிள் வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து கடன்பெற்று சைக்கிள் பயிற்சி மேற்கொண்டுதான் இந்தளவுக்கு முன்னேறி இருக்கிறேன்.
ஆனாலும் இன்னும் நாட்டிற்காகப் பல சாதிக்க வேண்டும் என்பது ஆசை. அதற்கு எனக்கு என்று ஒரு சைக்கிள் சொந்தமாகத் தேவை. அது மிகப் பெரிய கனவாக மனதை அழுத்திக் கொண்டிருந்தது.

என் குடும்பச் சூழலால் என்னால் சொந்தமாகச் சைக்கிள் வாங்க முடியவில்லை. என் வீட்டுப் பொருளாதாரம் அந்தளவுக்கு இல்லை. அப்பா இல்லாததால், அம்மாவின் வருமானம் குடும்ப செலவுக்கே சரியாகப் போய்விடும். ஆகவே அவர்களிடம் எனக்குச் சைக்கிள் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்கவே முடியாத சூழல்.
குடும்ப வறுமைக்கு இடையேதான் இந்தளவு பயிற்சி எடுத்தேன். பணம் இல்லை என்றாலும் மனதளவில் தளராமல் தொடர்ந்து பயிற்சியை எடுத்து வந்தேன். என்றாவது ஒருநாள் யாராவது உதவி செய்வார்கள் என நம்பிக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில்தான் உதய் அண்ணா விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். நானும் விளையாட்டுத்துறையைச் சார்ந்தவள் என்பதால் பெரிய சந்தோஷம் கிடைத்தது. உடனே அவரிடம் நாம் உதவி கேட்டால் என்ன? என்று தோன்றியது. உடனே கோரிக்கை வைத்தேன்.

எனக்கு argon 18 cycle தேவைப்படுகிறது என்று அவருக்குத் தெரியப்படுத்தினேன். அந்த சைக்கிள் விலை கொஞ்சம் இல்லை. 14 லட்சம். இவ்வளவு பெரிய தொகை. ஆகவே அவரது உதவி இல்லை என்றால் சத்தியமாக வாங்கவே முடியாது. அவரும் கோரிக்கை வைத்தவுடன் என்னைப் பற்றிய பின்புலத்தை எல்லாம் கேட்டு அறிந்தார்.
உடனே எந்தக் காலதாமதமும் இல்லாமல் வாங்கி கொடுத்தார். அவர் என் மீது பெரிய நம்பிக்கை வைத்து இந்த உதவியைச் செய்திருக்கிறார்.
இனிமேல் அவர் என் மீது வைத்த நம்பிக்கையையும் சேர்த்து டபுள் எனர்ஜி போட்டு உழைப்பேன். சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு நம் மாநிலத்தின் பெயரை நிலைநாட்டுவேன். அதற்குக் கடின உழைப்பு தேவை என்பது எனக்குத் தெரியும். ஒரு தமிழச்சியாகத் தமிழ்நாட்டுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பேன்.

என்னை நம்பி உதவி செய்த உதய் அண்ணாவை என் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். அவர் இல்லை என்றால் நான் இந்தத் துறையில் தொடர முடிந்திருக்காது" என்கிறார்
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மாநில & தேசிய அளவிலான மிதிவண்டிப் போட்டிகளில் சாதித்து வரும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தங்கை ஷா.தபித்தா.
இவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தயாராகி வருவதால் தனது பயிற்சிக்காகப் பிரத்தியேக மிதிவண்டி வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது பயிற்சிக்குத் துணை நிற்கும் விதமாகத் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.13.99 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் & உபகரணங்களை வழங்கினோம். தங்கையின் கனவுகள் வெல்லட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இவரது பதிவை சுமார் 67.3 ஆயிரம் படித்துள்ளனர். 2,202 பேர் தங்களின் 'இதயப்பூர்வமான' அன்பைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து ரூ 5 லட்சம் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications