தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்க விஜய் திட்டம்? மதுரை டூ ஓசூர் மொத்தம் 12 மாநகராட்சி.. புது டெண்டர்!
தமிழ்நாட்டின் முக்கிய மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவன பங்களிப்புடன் மேற்கொள்ளும் திட்டத்தை விஜய் தலைமையிலான பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர், மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, அவடி, ஓசூர், தாம்பரம், வேலூர் உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் பொது - தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க தமிழக அரசு ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் விட்டுள்ளது.

ஏன் இந்த மாற்றம்?
இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மைக்கான விதிமுறைகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், பல மாநகராட்சிகள் போதுமான தொழில்நுட்ப வசதிகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் நவீன உபகரணங்களும், உள்கட்டமைப்பும் இல்லாத நிலை எதிர்கொண்டு வருகின்றன.
இதை சமாளிக்க தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்ப திறன், முதலீட்டு மற்றும் செயல்திறனை பயன்படுத்தும் நோக்கத்தில் தான் தமிழ்நாடு அரசு இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதன்படி, வீடு தோறும் குப்பை சேகரிப்பு முதல் கழிவுகளை பிரித்து மறுசுழற்சி செய்வது, கழிவுகளை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளன.
மாநகராட்சிகளுக்கு என்ன பலன்?
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பல இடங்களில் நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய குப்பை செயலாக்க மையங்கள், நவீன தூய்மைப் பணிக்கான இயந்திர வசதிகளை உருவாக்க அரசு நிதி மட்டுமே நம்பியிருக்கும் சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், தனியார் முதலீட்டை ஈர்ப்பதன் மூலம் தூய்மை பணிக்கான உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும், பணியாளர்கள் ஈர்ப்பது மட்டுமல்லாமல், தெருக்களின் தூய்மை நிலை, சேகரிக்கப்பட்ட கழிவின் செயலாக்க அளவு போன்ற செயல்திறன் அடிப்படையில் நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்படலாம். இதன் மூலம் சேவையின் தரம் மேம்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

பொதுமக்களுக்கு என்ன மாற்றம்?
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் நகரங்களின் தூய்மை தரத்தை உயர்த்துவதாக இருந்தாலும், அதன் ஒரு பகுதியாக புதிய கட்டணம் அமல்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மாதாந்திர பயனாளர் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த கட்டணம் சொத்து வரியுடன் இணைக்கப்படுமா அல்லது தனியாக வசூலிக்கப்படுமா என்பது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.
தூய்மைப் பணியாளர்களுக்கு பாதிப்பா?
திட்டம் குறித்து அதிகமாக எழும் கேள்வி இதுதான். மாநகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களின் வேலை பாதுகாப்புக்கு உடனடி பாதிப்பு ஏற்படாது என்று உள்ளாட்சி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மாற்றுப் பணிகளில் அமர்த்தப்படலாம் அல்லது தற்போதைய அமைப்பிலேயே தொடரலாம். ஆனால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
அடுத்த கட்டம் என்ன?
தற்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கை, திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது அல்ல. முதற்கட்டமாக, 12 மாநகராட்சிகளிலும் பொது-தனியார் கூட்டாண்மை முறை செயல்படுத்தப்படுவதற்கான தொழில்நுட்ப, நிதி மற்றும் நிர்வாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையை தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்யவே டெண்டர் விடப்பட்டு உள்ளது.
இந்த டெண்டரில் வெற்றி பெறும் நிறுவனம் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே இறுதி கொள்கை முடிவுகள் எடுக்கப்படும். அதுவரையில் தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதில் எவ்விதமான முடிவும் எடுக்கப்படாது.












Click it and Unblock the Notifications