வென்று காட்டிய பிசினஸ் ராணிகள்.. சுய உதவிக்குழுப் பெண்களுக்கு உதயநிதி செய்த உதவி
சென்னை: 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பது பழமொழி. கூடித் தொழில் செய் என்பது பாரதியின் ஆத்திசூடி. கூடி வாழ்ந்து தொழிலும் செய்தால்? கோடி கோடியாக நன்மை என்பதை தமிழ்நாடு அரசு 'கூடி உழைத்தால் கோடி நன்மை' ஏழை எளிய பெண் வியாபாரிகளுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்து வருகிறது.
அதற்குச் சரியான சான்று 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது 'சிறப்புத் திட்ட அமலாக்கம் துறை மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் மற்றும் ஊரகக் கடன்' துறை ஒதுக்கப்பட்டதோ அப்போது முதலே விழாக்கோலம் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

அவர்தான் தனது சட்டமன்ற உரையில் 'நுண் தொழில் நிறுவன நிதி' திட்டத்தை ரூ.50 கோடியில் செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி மகளிர் மேம்பாட்டை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் புதிய வேகம் எடுத்துள்ளன.
சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சிறப்புக்குரிய 'நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி' திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தமிழக அரசு செயல்படுத்தும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்ந்த திட்டங்களில் இணைந்து எவ்வாறு கடனுதவி பெறுவது என்பதற்கான வழிகாட்டும் நெறிமுறை கையேட்டை அவர் வெளியிட்டார்.
இது தொடர்பான ட்விட்டர் பதிவு ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கிராமப்புறங்களில் மகளிர் தொழில் முனைவோர்களை உருவாக்க, வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் கீழ் 'நுண் தொழில் நிறுவன நிதி' திட்டத்தை ரூ.50 கோடியில் செயல்படுத்துவோம் எனச் சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவித்தோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்புக்குரிய 'நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி' திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்கள். முதற்கட்டமாக 10 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு நம் முதலமைச்சர் அவர்கள் ரூ.5.60 லட்சம் கடனுதவி வழங்கியபோது உடன் பங்கேற்றோம்.
மகளிரின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிசெய்ய நம் கழக அரசு என்றும் துணை நிற்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப்போன்றே 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் செயல்படும் சிவகங்கை வேலுநாச்சியார் உற்பத்தி நிறுவனம், தேனி ஆகமலை ஸ்பைசஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், செங்கல்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிமிட்டெட், செங்கல்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என மாநிலம் முழுவதும் இயங்கிவரும் பல்வேறு குழுக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்தார்.

அந்நிகழ்வில் பலருக்கும் கடனுதவி வழங்கப்பட்டன. அவர்கள் தங்களின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் சந்தைப்படுத்தி அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.
இத்திட்டத்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு, இன்று அதிகப்படியான லாபத்தை ஈட்டிவருகிறார்களா இந்தச் சுய உதவிக்குழுப் பெண்கள்?... அரசு வழங்கிய கடனுதவி எந்தளவுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி இருக்கிறது? என்பன போன்ற கேள்விகளை முன்வைத்து பலரிடம் பேசினோம்.
முதலில் நம்முடன் பேசினார் சுபாஷினி ஸ்ரீதர். இவர் மயிலாடுதுறை வளநாடு நீடித்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். "700 விவசாயிகளின் பாரம்பரிய நெல் ரகங்களை விதை உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டுதல் செய்து வருகிறோம்.
குறிப்பாக கருப்பு கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலி சம்பா, சீரகச் சம்பா போன்ற ரகங்களை அரிசியாகவும் உப்புமா மிக்ஸ் ஆக மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்தி பொருளாகவும் மாற்றி விற்பனை செய்து வருகிறோம்.

அதைப்போன்று பனை ஓலையிலான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். துணிப்பை, சணல் பை போன்றவற்றைத் தயாரித்து விற்கிறோம். இவை இல்லாமல் ஆகாயத் தாமரையிலிருந்து நிறைய கைவினை பொருட்களைத் தயாரித்தும் வருகிறோம்.
இத்தனைப் பொருட்களையும் குழுக்களில் உள்ள மகளிர் மூலமாக உற்பத்தி செய்கிறோம். அதை எங்கள் நிறுவனத்தின் மூலமாகச் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறோம்.
தனித்து இயங்கிவந்த எங்கள் குழு கடந்த 3 ஆண்டுகளாக 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் கிட்டத்தட்ட 600 மகளிருடன் இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செய்து வருகிறது. அரசின் திட்டத்திற்குள் வந்த அன்று முதல்தான் எங்களுக்கான அங்கீகாரம் என்பது சரியாகக் கிடைத்துள்ளது" என்கிறார்.
அடுத்ததாகப் பேசியவர் ஸ்ரீரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிஇஒ. இவர் என்ன சொல்கிறார்?

"எங்கள் குழுவில் 1200 பெண் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 817 பேர் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து உரத் தயாரிப்பு செய்து வருகிறோம். நாங்கள் இதுவரை 33 லட்ச ரூபாய் டேன் ஒவர் செய்துள்ளோம்" என்கிறார்.
இவரைப்போலவே மாவட்டம் வாரியாக பல குழுக்கள் பங்கேற்று தங்களின் தயாரிப்பு பொருட்களைப் பற்றிய சிறப்புகளை நம்மிடம் எடுத்துச் சொன்னார்கள். அவர்களின் பேச்சில், வாழ்வில் முயற்சி மட்டும் இருந்தால் மண்ணையும் பொன்னாக்கலாம் என்பது நமக்குப் புரிந்தது.
முதலில் பேசிய இருவரைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பெண் பிரதிநிதி நம்மிடம் பேசினார். அவர் "தக்காளி அதிக உற்பத்தியாகும் காலங்களில் மிகக் குறைந்த விலைகளில் கிடைக்கும். அப்போது அதிக அளவில் கொள்முதல் செய்து அதைப் பதப்படுத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட பசையாக மாற்றி விற்பனை செய்து வருகிறோம்" என்றார்.
இவர்களைப் போன்று தமிழ்நாட்டில் இந்தச் சுய உதவிக்குழுக்களில் ஆயிரக் கணக்கான பெண் விவசாயிகள் இயங்கி வருகின்றன.
அடுத்து ராணிப்பேட்டை கவிநெல் உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதியைக் கேட்டோம். அவர், "முதலில் 60 பேர்கள் இணைந்து இந்தக் குழுவைத் தொடங்கினோம். "முதலில் எங்களுக்கு அரசு மூலமாக நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முதலீடாக 5 லட்சம் ரூபாய் மானியத்தில் கடனாகக் கிடைத்தது. அதைக் கொண்டுதான் இந்தக் குழுவைத் தொடங்கினோம்.
இந்தக் குழு மூலம் தொடங்கப்பட்ட நிறுவனத்தால்தான் எங்களுக்கு முறையான லாபம் கிடைத்து வருகிறது. முன்பு எல்லாம் எவ்வளவு உழைத்தாலும் அந்தப் பணம் இடைத்தரகர்களுக்குத்தான் போகும். குழுவுக்கு வராது. இந்நிறுவனம் வந்த பிறகுதான் எங்களுக்கு ஒரு சரியான லாபமே கைக்கு வந்தது" என்கிறார்
இப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகள் குழுமத் தொடங்கி, அந்தப் பகுதிகளில் உற்பத்தியாகின்றவற்றை விற்பனை செய்துவருகிறார்கள் என்பதை நம்மால் அறிய முடிந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் சங்கரபரணி உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதி என்ன சொல்கிறார்? கேட்டோம். அவர், "அரசு வழங்கிய கடனுதவியை வைத்துத்தான் செக்கு ஆட்டுவதற்கான எந்திரம் வாங்கினோம். அதைக் கொண்டு எண்ணெய் ஆடி, அதை இப்போது விற்பனை செய்து வருகிறோம். அதன் மூலம் எங்களுக்கு வருமானம் வருகிறது" என்கிறார்
இவரைத் தொடர்ந்து வந்தார் காஞ்சிபுரம் வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதி. இந்தப் பெண், "தொடக்க நிதியாக அரசு 5 லட்சம் கடனுதவி செய்தது. தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலமாக எங்கள் குழுவுக்கு 10 லட்சமும் கொடுத்தார்கள். எங்கள் குழுவில் அதிக அளவில் வேர்க்கடலையைத்தான் சாகுபடி செய்கிறோம்.
அதைச் சந்தைப்படுத்துவதற்கு ஒரு முகவரிடம் கொண்டுபோய் கொடுப்போம். அல்லது ஒரு வியாபாரியிடம் கொடுப்போம். அதில் எவ்வளவுதான் கொடுத்தாலும் பெரிய அளவு லாபம் எங்களுக்குக் கிடைக்கவே இல்லை.
அதிக அளவில் உழைத்துக் குறைந்த அளவில் லாபம் ஈட்டி வந்தோம். அந்த நிலையை மாற்ற விரும்பினோம். ஆகவே என்ன செய்யலாம் என யோசித்தபோது ஒரு குழுவாக இணைந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கலாம் என முடிவு செய்தோம்.
அப்போதுதான் தமிழ்நாடு அரசின் 'வாழ்ந்து காட்டுவோம்' எங்களுக்கு முதன்முதலாக உதவி செய்தது. அதைக் கொண்டு கிடைத்த நிதி ஆதாரத்தை வைத்து நிறுவனத்தை ஆரம்பித்தோம். இப்போது குழு உற்பத்தி செய்யும் பொருட்களை நாங்களே நிறுவனத்தின் மூலமாகச் சந்தைப்படுத்தி வருகிறோம். இந்த நேரடி விற்பனை மூலம் இடைத்தரகர் இல்லாமல் அதிக லாபத்தை ஈட்டி வருகிறோம்.
தனித்தனி விவசாயிகளாக இருந்தபோது ஒரு கடலை மூட்டையின் விலை சுமார் 4 ஆயிரம் வரைதான் விற்பனை ஆனது. ஆனால் இப்போது மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்யும் போது 6 ஆயிரம் வரை கிடைக்கிறது" என்கிறார்.
விவசாயத்தைக் காப்பாற்றுவது என்பது வெறுமனே ஆடு, மாடு மேய்க்கும் தொழிலை அரசு தொழிலாக மாற்றுவோம் எனச் சவடால் விடுவது அல்ல; இப்படி ஆக்கப்பூர்வமாக வேளாண் பொருட்களின் மதிப்பைக்கூட்டி விற்பனையைப் பெருக்கச் செய்வதுதான். அதைப் பெண்கள் மூலமாக நாட்டுக்குப் புரிய வைத்திருக்கிறது இந்த அரசு.
-
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள் -
அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர் -
"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி












Click it and Unblock the Notifications